உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           முந்தை யுணர்ந்தோர் வந்துநினக் குரைப்ப
     170   யாமுங் காண்கங் கூமின் சென்றெனக்
          கோல்கொண் மள்ளர் காலி னோடி
          நம்பி வேஎண் மம்பி வருகென
          ஆணையிற் றிரீஇய ரஞ்சன்மி னீரெனத்
          தோணி யிழிப்புழித் துடுப்புநனி தீண்டி
     175   நெற்றி யுற்ற குற்ற மிதுவெனனன
 
                  (இதுவுமது)
             169 - 175 : முந்தை..........இதுவென
 
(பொழிப்புரை) இச்செய்தியை முற்பட அறிந்தோர் நின்பால் வந்து நினக்குக் கூறியதனாலே அங்ஙனமாயின் அவளை யாமும் காண்போம் விரைந்து சென்று அத்தோணியைக் கரைக்கே மீண்டும் அழைமின்! என்று நீ கட்டளை யிட்டருள நின் ஏவலராகிய பிரப்பங்கோல் ஏந்திய மறவர் காற்றெனக் கடுகி வந்து அவையோர் ஆணைக்கு மாறுபட்டு நடத்தற்கு அஞ்சாதே கொண்மின்! நம்மன்னன் மகனாகிய உதயண நம்பி இவளைக் காண்டற்கு விரும்புகின்றனன். தோணியைத் திருப்பிக் கொடுவாருங்கோள்! என்று கூற அதுகேட்ட தோணியியக்குநர் அதனை மீட்டுக் கொணர்ந்து அதனினின்றும் என்னை நின் திருமுன்னர் இறக்கிய பொழுது அத்தோணித்துடுப்புக்கடிதிற் புடைத்தமை யானே என் நெற்றியிற் பட்ட புண்ணாலாய வடுவிது வாகும் என்று (தன் னெற்றியில் வடிவினைக் காட்டிப் பின்னர்) என்க.
 
(விளக்கம்) முந்தை - முற்பட, காண்கம் - காண்பேம், கூமின் - கூவுமின், அழைமின், மள்ளர் - மறவர், நம்பிவேண்ம் - நம்பி விரும்புவான். துடுப்பு - வலிக்குங்கருவி, குற்றம் - வடு, அரங்கூறவையத்தோர் ஆணையின் திரிதற்கு அஞ்சன்மின் என்றவாறு. ஆணையிற்றிரிதலாவது, அவனை நீரில் வீழ்த்தாமல் மீண்டு வருதல்.