உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           கடிதார் மார்பனுங் கலிழ்ச்சி நோக்கிப்
          பிறப்பிடை யிட்டே னாயினு மெனக்கோர்
          சிறப்பின ராத றேற்றுமென் மனனெனக்
    205   கண்டதற் கொண்டு தண்டா தூறுமென்
          அன்புகரி யாக வறிபுதுணி கல்லேன்
          இன்றிவை கரியா வினித்தெளிந் தனனென
          உதயண குமர னுணர்ந்தமை தேற்றலும்ின்
 
                  (உதயணன் கூற்று)
              202 - 208 : கடிதார்..........தேற்றலும்
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயண குமரனும் இச்செய்தியைக் கூறும்பொழுதே அச்சாங்கியத்தாயின் மனங்கசிந்து அழும் கலுழ்ச்சியையும் நோக்கி அன்னாய் அழேல்! நினக்கு யான் பிறப்பினால் வேறுபாடுடையேன் ஆயினும் என்றும் நீயிர் எனக்கு ஒரு சிறப்புத் தன்மையுடையீர் என்றே என்னைத் தெளிவிக்கின்றது! என்றும், நும்மை யான் முதன்முதலாக இவ்வரண்மனையிற் கண்டநாள் தொட்டே நும்பால் என்நெஞ்சத்தே ஒழிவின்றி அன்பு ஊறாநின்றது என்றும், அவ்வன்பைச் சான்றாகக் கொண்டு நீயிர் எமக்கு எவ்வாற்றாற் றொடர்புடையீர் என்று அறிந்து தெளிந்து கொள்ள வழியின்றி யிருந்தேன். இற்றைநாள் அவ்வன்பேயன்றி நும் மொழிகளும் நல்ல சான்றாதலினாலே இப்பொழுது நீயிர் யார் என்பதனை நன்குணர்ந்து கொண்டேன் என்றும், தான் உணர்ந்துகொண்டமையைத் தெரிவித்தனன் அங்ஙனம் தெரிவித்தபின்னர் என்க.
 
(விளக்கம்) அன்பு தெய்வத் தன்மையுடையதாகலின் உதயணன் நன்கு அறிந்து கொள்வதற்குமுன் அவளைக் கண்டபொழுதே மனம் நெகிழ்வதாயிற்று என்பது கருத்து. இம்மையிலேயன்றிப் பழம்பிறப் பிற்றொடர்புடையார் மாட்டும் அன்புடைமை மனம் நெகிழ்விக்கும். இதனை,
    'துன்பினைத் துடைத்து மாயத் தொல்வினை தன்னை நீக்கித்
    தென்புலத் தன்றி மீளா நெறியுய்க்குந் தேவ ரோதாம்
    என்பெனக் குருகு கின்ற திவர்கின்ற தளவில் காதல்
    அன்பினுக் கவதி யில்லை யடைவென்கொல் அறித றேற்றேன்'
எனவரும் அனுமன் கூற்றினும் (கம்ப - அனுமப் - 15) காண்க. அறிபு - அறிந்து. இவை இம்மொழிகள். கரி - சான்று.