உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           மறைமூ தாட்டி மற்றுங் கூறும்
     210   கதிர்வினை நுனித்தநின் கணியெனைக் கூறிய
          எதிர்வினை யெல்லா மெஞ்சா தெய்தி
          இந்நகர்ப் பயின்றியா னிந்நிலை யெய்திற்
          றென்னி னாயிற் றென்குவை யாயின்
          என்முதல் கேளெனத் தொன்முத றொடங்கி
     215   ஆக்கையி னிழிந்துநின் னருளிற் பிறந்தவென்
          நோக்கரு நல்வினை நுகரிய செல்கெனக்
          கொற்றவன் மகனே பற்றாது விடுவேன்
          நீராட் டியலணி நின்வயி னீங்கியப்
          பேர்யாற் றொருகரைப் பெயர்ந்தனென் போகிக்
 
                 (சாங்கியத்தாய் கூற்று)
                209 - 219 : மறைமூதாட்டி..........போகி்
 
(பொழிப்புரை) பார்ப்பன மூதாட்டியாகிய சாங்கியத்தாய் மீண்டும் உதயணனை நோக்கிக் கூறுவாள் -- 'கொற்றவன் மகனே! இன்னுங் கேட்டருள்க, அற்றை நாள் ஞாயிற்று மண்டிலமுதலிய கோணிலை நுனித்துணர்ந்த நின் கணிமகன் எனக்குக் கூறிய எதிர்காலச்செய்கை யனைத்துங் குறைவின்றி எய்தி யான் இந்த உஞ்சை நகரத்தையடைந்து ஈண்டுப் பழகி மேலும் இங்ஙனம் வாசவதத்தைக்குச் செவிலியாகும் நிலையும் எய்தினன். எதனால் இந்நிலை வந்தது என்று கேட்பாயாயின் எனது பின்வரலாறு கூறுவல் கேட்டருள்க! தொன்றுதொட்டுப் பிறந்து வரும் யான் இவ்வாக்கையின்கண்ணே முன்னர்த் தீவினையாலே இளிவரவு பெற்றுப் பின்னர் நின்திருவருட் பேறு காரணமாகப் புதுவதாக இவ்வியாக்கையிலேயே பிறந்த யான் இனி எதிர்காலத்தே காண்டற்கரிய எனது நல்வினைப் பயனை நுகர்தற்குச் செல்க என்னுந் துணிவோடு நின்னைப் பற்றாமல் விடுத்து, நீராடுதற்கியன்ற அணியோடு நின்ற நின்னிடத்தினின்றும், நீங்கி அந்த யமுனைப் பேரியாற்றங்கரைகளுள் வைத்து ஒருகரை பற்றி நடந்துபோய் என்க.
 
(விளக்கம்) மறையோதுதற்குரிய பார்ப்பன மூதாட்டி என்க. கதிர் - ஞாயிற்று மண்டிலம். எதிர்வினை - எதிர் காலத்தே நிகழும் செயல். எஞ்சாது - குறையாமல். என்னின் - எதனால் இவ்வாக்கையிலேயே முதலில் இழிந்து பின் உயர்ந்து பிறந்த என்க. நின்னைப் பற்றாமல் என்க. அப்பேர்யாறு - அந்த யமுனைப்பேர்யாறு.