உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           அத்தவப் பட்டாங் கறுவகைச் சமயமும்
          கட்டுரை நுனித்த காட்சியே னாகி
    235   இமயப் பொருப்பகத் தீராண் டுறைந்தபின்
          குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின்
          அருந்தவ நுனித்த வறவா சிரியன்
          தருமவாத் திரையெனத் தக்கணம் போந்துழி
 
                  (இதுவுமது)
            233 - 238 : அத்தவப்பட்டு..........போந்துழி
 
(பொழிப்புரை) அம்முனிவன் மேற்கொண்டுள்ள அச்சாங்கிய நெறித் தவத்தையே யானும் மேற்கொண்டு ஆறுவகைப்பட்ட சமயத் தத்துவங்களையும் அம்முனிவன் கூறிய பொருள் பொதிந்த உரைவாயிலாய் நுணுகியுணர்ந்தேனாகி, அக்குழுவோடு இமயமலைச்சாரலிலே இரண்டாண்டுகள் இனிதினுறைந்திருந்த பின்னர்ச் செயற்கரிய தவத்தை மேற்கொண்ட அறங்கூறு மாசான் ஆகிய அத்துறவோன் தென்றிசைக் குமரித் தீர்த்தத்தே ஆடும் வேட்கையினாலே அறயாத்திரை செய்வல் என்று தென்றிசைக்கண் செல்லும்பொழுது என்க.
 
(விளக்கம்) அச்சாங்கியங் கூறுந்தவம் என்க. சாங்கியமதத்தினுள் ஆறுவகையுண்டு. அவை - யோகசாங்கியம் ஞாநசாங்கியம் நிரீசுர சாங்கியம் இச்சா சாங்கியம் புருடசாங்கியம் பேத சாங்கியம் என்பனவாம். கட்டுரை - அம்முனிவன் கூறிய மொழியென்க. மரீஇய - மருவிய. தக்கணம் - தென்திசை.விழா.