உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           மாவுஞ் சேனை மதிற்புறங் கவைஇய
     240  காள வனத்தோர் கபாலப் பள்ளியுட்
          செலவயா வுயிர்த்த காலை நூற்றுறை
          யாற்றுளிக் கிளந்த வறுவகைச் சமயமும்
          ஏற்றல் காணுமெம் மிறைவன் றானென
          மாற்றக் கோடணை மணிமுர சறைதலிற்
 
                  (இதுவுமது)
          239 - 244 : மாவுஞ்சேனை..........அறைதலின்
 
(பொழிப்புரை) அத்துறவோனைத் தொடர்ந்துவந்த குழுவாகிய யாங்கள் இந்தப் பெருமையுடைய உஞ்சைநகரத்தின் மதிலின் புறத்தைத் தழுவியமைந்த காளவனத்தின்கண் அமைந்த கபாலப்பள்ளியின்கண் வழிநடைவருத்தந் தீர்தற் பொருட்டுத் தங்கியிருந்த பொழுது, நூலின் துறையாலே நெறிப்படுத்திக் கூறிய அறுவகைச் சமயக் கணக்கர்களும் தம்முள் சொற்போர் புரிந்து மெய்யின் நிறுவுதலைக் காண்டற்கு எம் மன்னன் விரும்பினன் ஆதலால் அவ்வச்சமயப்புலவர்கள் பட்டிமண்டபம் பாங்கறிந்தேறுமின்! என்று அறிவித்தலையுடைய முழக்கத்தையுடைய அழகிய முரசத்தை வள்ளுவர் முழக்கு தலினாலே என்க.
 
(விளக்கம்) மாவுஞ்சேனை - பெரிய உஞ்சை நகரம். உச்சைனி மாகாளம் என்று ஒரு சிவதலமும் உளது. அதுவே ஈண்டுக் கபாலப் பள்ளி என்று கூறப்படுவதுபோலும் என்று கருதுவாரும் உளர். செலவயா - வழிநடை வருத்தம். ஏற்றல் - சொற்போரேற்றல். இறைவன் - ஈண்டுப் பிரச்சோதனன். மாற்றமாகிய கோடணை என்க. கோடணை - முழக்கம்.ா.