உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
         
     255    எழுந்த வாத்திரை யொழிந்தீண் டுறைவுழிக்
           கையது வீழினுங் கணவ னல்லது
           தெய்வ மறியாத் தேர்த்துணர் காட்சிப்
           படிவக் கற்பிற் பலகோ மகளிருட்
           டொடியோ டம்மனை தோழி யெனத்தன்
     260   குடிவழி யாகக் கொண்ட கொள்கையின்
           இத்தவ முவக்கும் பத்தினி யாதலிற்
           றவஞ்சார் வாகத் தலைப்பெயல் விரும்பி
           அறஞ்சார் வாக வன்புசெய் தருளி
           இறைமக னறிய வின்றுணை யாகிப்கலின்
 
                  (இதுவுமது)
            255 - 264 : எழுந்த.........இன்றுணையாகி
 
(பொழிப்புரை) யாங்கள் மேற்கொண்டெழுந்த குமரி யாத்திரை யொழிந்து இந்நகரத்தே உறைதலாலே, கையின் கண்ணதாகிய அரும்பொருள் நழுவிப்போய்விட்ட பொழுதினும் கணவனை நினைந்து கைதொழுதலன்றிக் கடவுளை நினையாத தெளிந்துணர்ந்த மெய்க் காட்சியினையும் சிறந்த நோன்பாகிய கற்பினையும் உடைய பலராகிய அரசியருள் வைத்துத்தொடி யணிந்த வாசவதத்தையின் தாயாகிய கோப்பெருந்தேவி தன் முன்னோர் இச் சாங்கிய மதத்தினராதலின் அக் குடிவழியாகத் தானும் மேற்கொண்ட இச்சாங்கியக் கொள்கையள் ஆதலாலே பெரியோர் கேண்மைகொள் யான் மேற்கொண்ட இந்தத் தவத்தைப் பெரிதும் விரும்புமொரு பத்தினியாகலின், இத் தவமே சார்வாக என்னோடு பயிலுதலைப் பெரிதும் விரும்பி என்னைத் தன் தோழியாகக்கொண்டு என்பாற் பேரன்பு செய்தருளுதலாலே யானும் அவள் விருப்பத்திற் கியைந்து பிரச்சோதன மன்னனும் அறியவே அவட்கு இனிய உசாத் துணைத் தோழியும் ஆகினேன் என்க.
 
(விளக்கம்) குமரியாடவென எழுந்த யாத்திரை என்க. ஈண்டு - இந்நகரத்தே. கையதுவீழினும்......தெய்வம் அறியாமகளிர், என்றது - யாரும் தமது கையிலுள்ள அரும் பொருள் நழுவிப் போன விடத்தே தாம் தாம் வழிபடுங் கடவுளை நினைதல் இயல்பன்றோ, அந்தச் செவ்வியினும் இம்மாதர் கணவனை நினைவதல்லது கடவுளை நினையார் என்றவாறு. இனி இதற்கு ''உறங்கும் பொழுதினும் என்றபடி'' என விளக்கங் கூறுவாரும் உளர். கற்புடைமையே ஒரு சிறந்த நோன்பாகலின் படிவக்கற்பு என்றார். இனி, படிவம் - விரதம். தொடியோள் என்றது வாசவதத்தையை. தம்மனை - தாய். இத்தவம் என்றது தான்மேற்கொண்டுள்ள சாங்கியநெறித் தவத்தை. கோப்பெருந்தேவி இதனை விரும்பக் காரணம் அவள் முன்னோர் இச்சமயக் கொள்கையுடையோர் என்பது கருத்து. இறைமகனும் யான் தேவிக்குத் தோழியாதற்குடம் பட்டனன் என்பாள் இறைமகனறிய இன்றுணையாகி என்றாள். அன்பு செய்தருள என்க. ஆகி என்னும் எச்சத்தை (270) தரக் கொண்டு என்பதனால் முடித்திடுக. உரைவிளக்கத்தின் பொருட்டு இன்றியமையா விடங்களிலே எச்சங்களை முற்றாக்கி முடிப்பேம் அவற்றை அறிந்து கொள்க.