உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
         
     265   பிறைநுதன் மாதர் பிறந்த யாண்டினுள்
           நாவொடு நவிலா நகைபடு மழலையள்
           தாய்கைப் பிரிந்துதன் றமர்வயி னீங்கி
           என்கைக் கிவரு மன்பின ளாதலிற்
           றாயென் றறிந்தன ணீயினி வளர்க்கெனக்
     270   காதல் வலையாக் கைத்தரக் கொண்டவள்
           பால்வகை யறிந்தபின் படர்வேன் றவமென
           மைத்துன மங்கை மரூஉமா கண்டு
           நட்புவலை யாக நங்கையொ டுறைவேன்
           ஒன்பதிற் றியாட்டை யுதயண கேளெனத்
 
                  (இதுவுமது)
              265 - 274 : பிறை.........கேளென
 
(பொழிப்புரை) உதயண வேந்தே கேட்டருள்க! (274) பிறை போன்ற நெற்றியையுடைய வாசவதத்தை பிறந்த அவ்வியாண்டினுள்ளேயே நாவோடு நன்கு பொருந்தி எழாததும் கேட்போர்க்கு நகைப் பூட்டுவதுமாகிய மழலைச் சொல் மிழற்றும் பொழுதிலேயே தன் நற்றாயின் கையிலிருந்து விலகி அயல் நிற்கும் தன் சுற்றத்தார் பாலும் செல்லவிரும்பாளாய் அவரையும் விலக்கி ஆண்டுச் சிறிது சேய்மையினிற்கும் என்கையில் வருதற்குப் பெரிதும் முயலுகின்ற பேரன் புடையளாயிருத்தல் கண்டு கோப்பெருந்தேவி என்னை நோக்கித் 'தோழி! இவள் நின்னையே பெற்றதாயினும் சிறந்த நற்றாயாக வுணர்கின்றனள் காண் ! இனி நீயே இவளை இனிது பேணி வளர்க்கக்கடவை!' என்று கூறித் தன் அன்பையே வலையாகக் கொண்டு என்னைத்தன் வயப்படுத்து என் கையிலே வாசவதத்தையாகிய குழந்தையை வழங்க யானும் ஏற்றுக் கொண்டு அவ்வாசவதத்தையின் ஊழ்வினைத் திறத்தை யுணர்ந்த பின்னர், யான் மேற் கொண்டதவ நெறிக்கட் செல்வேனாக என்று துணிந்து, நின் மைத்துனியாகிய அவ்வாசவதத்தை இடையறாது என்னோடு மருவுதலையுங் கண்டு அவள் நட்பே பின்னும் ஒரு வலையாகுதலானே அற்றைநாள் தொடங்கி நிகழ்ந்த ஒன்பதியாண்டுகள் அந்நங்கையோடு உறையாநின்றேன்,' என்று என்க.
 
(விளக்கம்) மாதர் - வாசவதத்தை, தாய் - கோப் பெருந்தேவி, தமர் - சிற்றன்னை முதலியோர். பால் வகையறிந்தபின் என்றது இவள் ஒருதலைவனை அடைந்தபின் என்றவாறு. என்னை? 'ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலதாணையின் ஒத்துகிழவனும் கிழத்தியும் காண்ப' என்பது பற்றித் திருமணத்தையே ஈண்டு ''அவள் பால் வகை'' என்றாள் என்க. தாய் காதல் வலையால் என்னைக் கட்டுப்படுத்திக் கைத்தர யான் நின் மைத்துன மங்கை நட்புவலையிற் கட்டுண்டுறைவேன் என்றாள் என்க. மைத்துனமங்கை என்றாள் உதயண மன்னனுக்கு ஆராயச்சி பிறத்தற்கு என்க. இதனால் இஃது அவளும் நின்னைக் காதலித்துளாள் என்பதனைக் குறிப்பாக வுணர்த்திய படியாம்.