உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           சாவினை துணியு மாத்திரை யாவதும்
          மறுவொடு மிடைந்து மாண்பில வாகிய
          சிறுசொற் கிளவி கேளல செவியென
     315   அங்கையிற் புதைஇ யணிநிற மழுகிய
          நங்கையைத் தழீஇ நன்னுத னீவி
          மனங்கொள் காரண மருளக் காட்டி
          இனமி லொருசிறை யின்னினி தாகப்
          பூமலி சேக்கையுட் புகுத்தினென் போந்தேன்
     320   பாயலு ளாயினும் பரிவவ டீர்கென
 
                  (இதுவுமது)
             311 - 320 : தாவம்..........தீர்கென
 
(பொழிப்புரை) நின்பாலே அவட்கெய்திய காமவெப்பம் முதிர்ந்து பின்னரும் 'யான் சாதலைத் துணியும் அளவிற்கு எவ்வாற்றானுஞ் சிறுமையுடைய ஏதிலார் மணம் பேசி வருகின்றனர் என்னும் பழியோடு விரவிச் சிறிதும் மாண்பில்லாத சொற்களாகிய மொழியைச் சிறிதும் என் செவிகள் கேளாதனவாகுக!' என்று தனது அங்கையாலே தன் செவிகளைப் பொத்திக் கொண்டு மேனியொளி மழுங்கிய வாசவதத்தையை யான் தழுவிக் கொண்டு அவளுடைய நல்ல நுதலைத்தடவி அவள் மனங் கொள்ளத்தகுந்த காரணங்களை அவள் வியக்கும்படி கூறி ஒருவாறு தேற்றித் தோழியரும் இல்லாத ஒரு பக்கத்தே படுக்கையிற் கிடந்து சிறிது துயில் கொண்டேனும் அவள் துயரம் சிறிது தீர்க என்று கருதி மிகவும் இனிதாக மலர்மிகுந்த படுக்கையிலே அவளைப் புகுத்தி யான் ஈங்கு வந்தேன் காண் என்று கூறி என்க.
 
(விளக்கம்) தாவம் - தாபம்; காமவெப்பம். யான் சாவைத் துணியுமளவிற்கு மறுவோடு மிடைந்த சிறுசொற் கிளவி. மாண்பிலவாகிய சிறுசொற் கிளவி என ஒட்டுக. சிறுசொற் கிளவி என்றது ஏதிலார் மணம் பேசி வருகின்றனர் என்னும் சொல். நங்கை - வாசவதத்தை. மழுகிய - மழுங்கிய. காரணம் - பிரச்சோதனன் நின்னை உதயணனுக்கே வழங்குவன் என்பதற்குரிய காரணங்கள் என்க. இனம் - தோழியர். இன்னினிது - மிகவும் இனிது. பாயலுளாயினும் பரிவு அவள் தீர்கெனப் பூமலி சேக்கையுட் புகுத்தினென் என மாறுக.