உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           இஃதவ ணிலைமை யின்னினிக் கொண்டு
          பரிவுமெய்ந் நீங்கிப் பசலையுந் தீர்கென
          ஒண்ணுதன் மாதர் கண்ணேப் பெற்ற
          புண்ணுறு நெஞ்சிற் புலம்புகை யகல
    325   மாதர் நுதலிய மருந்தியற் கிளவி
          ஆருமி லொருசிறை யன்புறப் பயிற்றி
          நிலைமைக் கொத்த நீதியை யாகித்
          தலைமைக் கொத்த வதுவை யெண்ணென
          இழுக்க மில்லா வியல்பொடு புணர்ந்த
    330   ஒழுக்க மெல்லா மோம்படுத் துரைஇப்
 
                  (இதுவுமது)
             321 - 330 : இஃதவள்..........உரைஇ
 
(பொழிப்புரை) பின்னரும் 'அரசன் மகனே! நின் மைத்துன மங்கை நிலைமை இஃதாம். ஆகவே நீ இனிய இப்பொழுதுமுதற் கொண்டு நின் உடன் மெலிவு நீங்கிப் பசலையுந் தீர்க' என்று ஒளிபொருந்திய நுதலையுடைய வாசவதத்தையின் கண்ணாகிய கணையேறுண்டமையாலே புண்ணுறுகின்ற அவ்வுதயண குமரனுடைய நெஞ்சின்கண்ணுள்ள பிரிவாற்றாப் பெருந்துயர் அகன்று போகும்படி வாசவதத்தையின் காதலைக் குறித்த அமிழ்தன்ன சொற்களைப் பிறர் யாரும் இல்லாத தனியிடத்தே அவன் அன்பு பெருகும்படி பேசி, 'அண்ணலே நீ தானும் அவன் நிலைமைக்கேற்ற அறத்தைக் கடைப்பிடிப்பாயாகி நினது தலைமைத்தன்மைக்கேற்ற திருமணச் செயல் நிகழும் வழியை ஆராய்வாயாக' என்றும் கூறி மேலும் குற்றம் இல்லாத இயல்போடு கூடிய ஒழுக்கங்களையும் ஓம்படைக்கிளவியோடு கூறியென்க.
 
(விளக்கம்) இன்னினிது - இனியவிப்பொழுது என்க. இம்மறை யுணர்ந்தமையால் இனிதாய இப்பொழுது என்க. மெய்ப்பரிவு என மாறுக. மாதர் இரண்டுள் முன்னது வாசவதத்தை, பின்னது காதல். கண்ணே - கண்ணாகிய கணை. புலம்பு - தனிப்படர், மருந்து - அமிழ்து. வதுவை செய்யும் வழியை எண் என்றாள் என்க. உரைஇ - உரைத்து.