உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           பூட்டுறு பகழி வாங்கிய வேட்டுவன்
          வில்விசை கேட்ட வெரூஉப்பிணை போலக்
          காவ லாட்டியர் நாமிசை யெடுத்த
          சொல்லிசை வெரீஇய மெல்லென் பாவை
    335   என்முகத் தேயு மிறைஞ்சிய தலையள்
          நின்முகத் தாயி னிகழ்ந்ததை நாணி
          நிலம்புகு வன்ன புலம்பின ளாகிச்
          சிறுமையி னுணர்ந்த பெருமக னிரங்க
          மண்கெழு மடந்தாய் மறைவிடந் தாவென
    340   ஒன்றுபுரி கற்பொ டுலகுவிளக் குறீஇப்
          பொன்ற லாற்றிய புகழாள் போல
          கொண்ட கொள்கையி னொண்டொடி யோளும்
          துளிப்பெயன் மொக்குளி னொளித்த லஞ்சுவென்
 
                  (இதுவுமது)
           331 - 343 : பூட்டுறு..........அஞ்சுவென்
 
(பொழிப்புரை) மேலும் பெருமானே! தன்னைப் பாதுகாக்கும் மகளிர் தமது நாவாலே பேசிய ஏதிலோர் மணமாகிய அச்சிறு சொல்கேட்டு பூட்டப்பட்ட கணையையுடைய வேட்டுவன் வளைத்த வில்லினது விசைப்பொலியைக் கேட்ட அச்சத்தையுடைய பெண்மான் போன்று அச்சமுற்ற மெல்லிய சாயலையுடைய அவ்வாசவதத்தை தாயாகிய என் முகத்தேயும் நாணிக் கவிழ்ந்த தலையையுடையளாயினள். அத்தகையள் நின் முகத்தே விழிப்பதாயின் என்னாகுவள்! நிகழ்ந்த செயல்கட்கு நாணி நிலத்தின் கண்ணே புதையுண்டாற் போன்றதொரு தனிமையையுடையளாகி முன்பொரு காலத்தே தன்னைச் சிறுமைக் குணமுடையளாகக் கருதிய சக்கரவர்த்தி திருமகனான இராமனே மீண்டும் இரங்கி யழும்படி நிலமகளை நோக்கி, ''மண்கெழு மடந்தையே! எளியேன் மறைந்தொழிதற்கு இடமளிப்பாயாக'' வென்று வேண்டி நிலம் பிளத்தலாலே அதனுட்கரந்து தன்னெஞ்சினை ஒருமைப்படுத்தப்பட்டமை யாலான தன் தெய்வக் கற்புடைமையை இப்பேருலகிற்கு விளக்கியருளி மறைதலைச் செய்த பெரும்புகழையுடைய சீதையைப் போன்று தான் மேற்கொண்ட கற்புடைமையாலே வாசவதத்தை தானும், மழையினது துளியாலியன்ற நீர்க் குமிழிபோன்று அழிந்துபடுவாளோ? என்று யான் பெரிதும் அஞ்சுகின்றேன்காண்! என்க.
 
(விளக்கம்) பகழி - கணை. வில் நாணை விசைத்தலாலே விழும் ஒலி என்க. பிணை - பெண்மான். நாமிசை யெடுத்த சொல்லிசை என்றது மெல்லப் பிறர் செவிப்படாதபடி பேசிய மெல்லிய பேச்சு என்றவாறு. என் முகத்தேயும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு, தாயாகிய என் முகத்தேயும் என்றவாறு. மைத்துனனாகிய நின் முகத்தே என்க. நிகழ்ந்தது - அயலார் மணம் பேசுதல். சிறுமையின் - கற்பிறந்தாள் என்னும் இளிவர வுடையோள் போன்று என்க. பெருமகன் - இராமன். பொன்றலாற்றிய - மறைத்தருளிய. புகழாள் - சீதை. பெயற்றுளி மொக்குள் என மாறுக. கொள்கை கற்புடைமை உட்கிடையுமாம்.