உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            கொற்ற வேந்தன் குடிகெழு குமரரைக்
           கற்றவை காட்டும் வத்தவர் கோவெனப்
     20    பல்பெருங் கேள்வி படைத்தோ ரன்ன
           கல்வி மாந்தர் கலித்த கௌவையில்
           ஆப்புறு பாடமொ டருத்தங் கூறி
           நாக்கொள் கேள்வி நவிற்றிக் காட்டி
           மண்டல மருங்கிற் கொண்டகம் புகுந்து
     25    படைகெழு தெய்வம் புகலப் பலிவகுத்
 
                    (இதுவுமது)
            18 - 25: கொற்றவேந்தன்..........வகுத்து
 
(பொழிப்புரை) வெற்றியுடைய பிரச்சோதன மன்னன் குடித் தோன்றிய அவன் மக்கள் தன்பாற் பயின்ற வித்தையை யெல்லாம் வத்தவ மன்னன் செய்வித்துக் காட்டுவன் என்று பலவாகிய பெரிய கல்விகேள்விச் செல்வங்களைப் படைத்து ஒருதன்மையராகிய கல்விச் சான்றோர் எழுந்து ஆரவாரித்துக் கூறிய ஆரவாரத்தின் பின்னர் அம்மாணவரை உதயணகுமரன் யாப்பமைந்த மூலபாடங்களை ஓதுவித்தும், அவற்றிற்குப் பொருள் விரித்துக் கூறுவித்தும், அவர் தம் நாவினால் ஓதியுட் கொண்டுள்ள கேள்விச்செல்வங்களை அவ்வவையில் நாவினால் கூறுவித்துக் காட்டியும் பின்னர் வளைந்த அணியாக மாணவரை அழைத்துக் கொடுபோய் அச்செண்டு வெளியின் அகத்தே புகுந்து, அவ்விடத்தே படைக்கலத்தே பொருந்திய தெய்வமாகிய கொற்றவை மகிழும்படி பலிப் பொருள்கள் வகுத்துவைத்து வணங்குவித்துப் பின்னர் என்க.
 
(விளக்கம்) வத்தவர்கோ குமரரைக் கற்றவை காட்டும் என்று மாந்தர்கலித்த கௌவையில் என இயைக்க. குமரர் - மன்னன் மக்கள். வத்தவர்கோ - உதயணன், எனவே உதயணனைக் கண்டுழி மாந்தர் ஆரவாரித்தனர் என்பதாயிற்று. கௌவையில் - ஆரவாரத்தில். ஆரவாரத்தின் கண்ணே தொடங்குதலின் அஃதிடம் போலக் கூறப்பட்டது. ஓரன்ன - சமமான. ஆப்பு - யாப்பு. எனவே மூல பாடம் ஆயிற்று. அருத்தம் - பொருள். நவிற்றி - கூறுவித்து. இக்கல்வி கேள்விகள் அவையிடையேயும் படையரங் கேற்றம் செண்டு வெளியினகத்தேயும் நிகழ்ந்தன என்பார், கொண்டகம்புக்கு என்றார். அகம் - செண்டு வெளியின் நடுவிடம். தெய்வம் - கொற்றவை. பலி - பூசனைப் பொருள். வகுத்து வணங்கிய பின்னர் என்க.