உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            திடைநாட் பிறையி னேற்றிய திருவிற்
           கண்ணா லுறுத்துக் கடவதிற் றாங்கி
           எண்ணா லரணமு மீரெண் கரணமும்
           துன்னரும் பாசமொடு தொடங்குபு தோன்றி
     30    அரிதியல் சாரியை யந்தரத் தியக்கமும்
           பொருவின் னாழிகை பூணு மாறும்
           செருவா ளாட்டுஞ் சேடகப் பிண்டியும்
           சாரியை விலக்கும் வேறிரி வகையும்
           இடுக்கட் போதி னேமப் பூமியுள்
     35    வகுத்த வாயில் வகைவகை யிவையென
           ஒட்டும் பாய்த்துளுங் கரந்தொருங் கிருக்கையும்
           செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும்
           தாழாச் சிறப்பிற் பாழியிற் பயின்ற
           காலாட் கரும விகற்பமுங் காட்டிக்
     40    கருவித் தாக்கினுங் காலாட் சுற்றினும்
           தனியி னாயினுந் தானையொ டாயினும்
           புகவும் போக்கும் பொச்சாப் பின்றிப்
           பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி
 
                    (படைப்பயிற்சி வகை)
                 26 - 43: இடைநாள்..........பயிற்றி
 
(பொழிப்புரை) அம்மாணவர்தாம் எண்ணாட் பக்கத்துத் திங்கள்போன்று அரைவட்டமாக நாணேற்றி வளைத்த, அழகிய தம் வில்லைப் பின்னர்க் கண்ணாலே கூர்ந்து நோக்கி முறைப்படி இடக்கையிற் பிடித்து வில்லிலியற்றற்குரிய முப்பத்திரண்டு பாதுகாவல் வகைகளும், பதினாறு செய்முறைகளும் செய்து காட்டியும், பகைவர் கிட்டுதற்கரிய பாசம் என்னும் படைக்கலத்தோடு தோன்றி அரிதாக இயலுகின்ற வேறுவேறான சாரியை வகைகளும், போர் செய்யும் வில்லையும் கணைப்புட்டிலையும் அணிந்து கொள்ளும் வகைகளும், போர்வாள் கொண்டு போராடும் வகையும், கேடகம் பிடித்தலும் பகைவருடைய இயக்கத்தைத் தடுத்தலும், வேல் சுற்றும் வகையும் பகைவரான் இடையூறு நேர்ந்துழிப் பாதுகாப்பிடங்கட்குச் செல்ல வகுத்த வாயில் வகையும், இவை என்றும் செய்துகாட்டுவித்தும் பகைவரோடு ஒட்டிப் போராற்றும் வகையும், பகைவர்மேற் பாயும் வகையும் படைக்கலத்தாற் றம்மைப் பாதுகாத்து மறைத்துக் கொண்டு பகைவரூடிருத்தலும், போர் மேற்கொண்ட யானையின் மருப்புகளின் இடையே புகுந்து சுழலும் வகையும், குறையற்ற சிறப்பினையுடைய போர்க்களத்தே நின்று பயின்ற காலாட் படையினரின் போர்த் தொழில் வகையும், செய்து காட்டியும் மேலும் பகைவர் படைக்கலம் தம்மைத் தாக்கும் பொழுதும் பகைவர் காலாட்படை தம்மை வளைத்துக் கொள்ளும் பொழுதும், தமியராயினும் தம் படைஞரோடாயினும் அவ்விடை யூற்றிற்கு இடையூறாகப் போர்த் தொழிலின்கட் புகுதலும், அன்றேல் தற்காப்பின் பொருட்டுப் புறம்போதலும் ஆகிய இன்னோரன்ன வித்தைகளையும் பின்னரும் மறதியின்றிப் பகைவரை வெல்லுதற்குரிய வித்தகச் செயல் பலவேறு வகைகளையும் செய்து காட்டியும் என்க.
 
(விளக்கம்) இடை நாள் பிறை - எட்டா நாள் திங்கள். இது நாணேற்றிய விற்குவமை. உறுத்து - கூர்ந்து நோக்கி. கடவதின் - பிடிக்க வேண்டிய முறைப்படி. அரணம் - பாதுகாப்புத் தொழில். கரணம் - செயல் வகை. பாசம் - ஒருவகைப் படைக்கலன். ''தளையிடு பாசம்'' என்பர் பின்னும், (1 - 46 : 59). அந்தரம் - வேற்றுமை. அந்தர சாரியை என மாறுக. இடுக்கண் - இடையூறு. ஏமப்பூமி - பாதுகாப்பிடம். ஒட்டு பகைவரை நெருங்கல். பாய்த்துள் - பகைவர் மேற் பாய்தல்; படைக்கலத்தாற் றம்மை மறைத்துக் கொண்டு பகைவரூடே யிருத்தல் என்க. திரிவு - சுழலுதல். புகவு - புகுதல். போக்கு - புறம் போதல். சித்திரம் - வித்தகத்தன்மை.