உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            வண்பரிப் புரவியும் வானெடுந் தேரும்
     45    அண்ணல் யானையும் பண்ணுறுத் தேறி
           இலைய வினப்பரி கொளீஇச் சிலையின்
           மதியோர் புகழ்ந்த மரபியல் வழாமை
           நுதியமை நுண்படை நூல்வழிச் சிதறி
           மழைத்துளி படினும் வான்றுகள் சூழினும்
     50    விலக்கித் தவிர்க்கும் விற்றொழி லுள்ளிட்
           டிலக்கத் திண்படை யேறுபல காட்டலும்
           தலைத்தோர் யானைக்குந் தருக்கின ராயினர்
           படைத்தே ராள பாலக ரிவரென
           அவைபுகழ்ந் தெடுத்த வரும்பெபி கிளவியொடு
     55    தகைமுடி வேந்தன் றாள்புகழ்ந் தேத்தித்
 
                   44 - 55: வண்பரி..........ஏத்தி
                    (குதிரையேற்றம் முதலியன)
 
(பொழிப்புரை) இனி வளமுடைய செலவினையுடைய குதிரையும் வானுற வுயர்ந்த நெடிய தேரும் பெருமையுடைய யானையும் ஆகிய ஊர்திகளை அணிசெய்து அவற்றில் ஏறியும் இவற்றை ஓரினமான நடைபயிற்றியும் அவற்றின் மேலிருந்து வில்வித்தையில் அறிஞர் பாராட்டிய முறை பிறழ்தலின்றித் தொலைவிலுள்ள ஒற்றை நூலாகிய இலக்கின்மேல் கூர்மையுடைய நுண்ணிய கணைகளைத் தவறாமே எய்தும் மழைத்துளி வீழினும் வெளியிற் பறக்கும் துகள் வீழினும் அவற்றையும் தம்மேல் வீழாதபடி தடுத்தொழிக்கும் வியப்புடைய விற்றொழில் நுணுக்கம் உட்பட, ஏனைய இலக்கின்மே லெறியும் திண்ணிய படைக்கலம் எறிதலாகிய வகைபலவும், காட்டாநிற்றலாலே அவற்றைக் கண்ணுற்ற அவ்வவைக் கண்ணுள்ள சான்றோர் பலரும் உதயணனை நோக்கிப் படையிற் சிறந்த தேர்மறவனே! இச்சிறாஅர் தாமும் நின்னருளாலே தலையாய தேர்க்கும் யானைக்கும் எம்மின் மிக்காரிலர் என்று இறுமாக்குஞ் சிறப்பினை உடையராயினர் என்று பாராட்டிய பெறலரிய மொழிகளோடே அழகிய முடியையுடைய பிரச்சோதன மன்னனும் உதயணன் முயற்சியைப் புகழ்ந்து பாராட்டி என்க.
 
(விளக்கம்) பரி - செலவு. அண்ணல் - பெருமை. பண்ணுறுத்து - அணிசெய்து. இலையம் - லயம் - ஒழுங்கு. கொளீஇ - கொள்வித்து. சிலையின்மதியோர் - வில்வித்தையில் அறிவுமிக்கோர். இலக்கம் - இலக்கு, குறிக்கோள். ஏறு - எறிதல்வகை. தேராள: விளி. அவை, ''தேராள இவர் ஆயினர்'' எனப் புகழ்ந்தெடுத்த கிளவியோடு தான் புகழ்ந்து ஏத்தி என்க. வேந்தன் - பிரச்சோதனன்.