உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            வெந்திறல் வேந்தனு நன்றென வருளி
           வாயிற் கூத்துஞ் சேரிப் பாடலும்
           கோயி னாடகக் குழுக்களும் வருகென
     90    யாழுங் குழலு மரிச்சிறு பறையும்
           தாழ முழவுந் தண்ணுமைக் கருவியும்
           இசைச்சுவை தரீஇ யெழுபவு மெறிபவும்
           விசைத்தெறி பாண்டிலொடு வேண்டுவ பிறவும்
           கருவி யமைந்த புரிவளை யாயமொடு
     95    பல்லவை யிருந்த நல்லா சிரியர்
           அந்தர வுலகத் தமரர் கோமான்
           இந்திரன் மாணக ரிறைகொண் டாங்குப்
           பொருவேன் முற்றத்துப் புரிவனர் புகுதரப்
           பாடன் மகளிர் பல்கல னொலிப்ப
     100    ஆடன் மகளி ராயமொடு கெழீஇ
           வேல்வேந் திருந்த நூல்வேண் டவையத்துத்
 
        (அரசன் வாசவதத்தை அரங்கேற ஆவனசெய்தல்)
               87 - 101: வெந்திறல்..........அவையத்து
 
(பொழிப்புரை) அது கேட்ட வெவ்விய ஆற்றலுடைய பிரச்சோதன மன்னனும் நன்று நன்று அங்ஙனமே நிகழ்த்துவாம் என்று உடன்பட்டருளி ஏவலர்பால் நமது திருமுன்றிலில் கூத்தாடும் குழுவினரும் சேரிப்பாடகர் குழுவும் அரண்மனைக் கூத்தர் குழுக்களும் இவ்வரங்கேற்றவைக்கண் வருக என்று கட்டளை விடுத்தலானே யாழும் குழலும் அரித்தெழும் ஓசையையுடைய சிறுபறையும் தாழம்பட்ட ஓசையையுடைய முழவும் தண்ணுமையும் கஞ்சதாளமும் ஆகிய பண்ணிற்குச் சுவைமிகுவித்தற் பொருட்டு முழக்குவனவும், எழுப்புவனவும் விசைத்துத் தட்டுவனவும் ஆகிய இவற்றோடும் இசையரங்கிற்கு வேண்டுவன இன்னோரன்ன பிற இசைக் கருவிகளையும் உடைய முறுக்கு வளையலணிந்த மகளிர் குழாத்துடனே, பண்டும் பற்பல இசையரங்குகளிலே தலைவராயிருந்த சிறந்த இசையாசிரியர் இந்திரனுடைய சிறந்த நகரத்தின்கட் சென்று வதிவார் போன்று மகிழ்ந்து போராற்றும் வேற்படையையுடைய அரண்மனை முன்றிலிலே சென்று புகாநிற்பவும், அப்பாடல் மகளிருடைய பலவாகிய அணிகலன்கள் ஒலியாநிற்பவும், வேலேந்திய பிரச்சோதன மன்னன் அந்நாடக மகளிர் குழுவோடு இயைந்து வீற்றிருந்த இசைநூல் நுணுக்கங்களை விரும்புகின்ற அவையின்கண்ணே என்க.
 
(விளக்கம்) வேந்தன் - பிரச்சோதனன். நன்று என்பது உடன்பாட்டுக் குறிப்புச் சொல். கூத்துக்குழுவும் பாடற்குழுவும் எனவும் ஒட்டுக. அரி - அரித்தெழுமோசை. தாழமுழவு - தாழம்பறை; தாழம்பட்ட ஓசையையுடைய பறை என்றவாறு. தண்ணுமை - மத்தளம். எழுப - நரப்புக் கருவியும் துளைக்கருவியும் என்க. எறிப - தோற்கருவியும் கஞ்சக்கருவியும் என்க. பாண்டில் - கஞ்ச தாளம். பல்லவையினும் தலைவராயிருந்த ஆசிரியர் என்க. வேந்து - பிரச்சோதனன். நூல் - இசைநூல்.