|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 37. விழாக் கொண்டது | | ஐவகைக்
கதியு மற்ற மின்றித்
தெய்வ நல்யாழ் திருந்திழை
தைவர
மெய்பனிப் பதுபோன் மொய்யவை மருள
115 நாற்பெரும் பண்ணு மெழுவகைப்
பாலையும்
மூவேழ் திறத்தொடு முற்றக்
காட்டி
நலமிகு சிறப்பொடு நல்லவை
புகழ
இயம்வெளிப் படுத்தபி னிசைவெளிப் படீஇய
| | (இதுவுமது) 112 - 118:
ஐவகை.............வெளிப்படுத்தபின்
| | (பொழிப்புரை) சச்சபுட
முதலிய ஐவகைத் தாளகதிகளிலே பிழைபாடின்றித் தெய்வம் பொருந்திய
நல்லயாழினைத் திருந்திய அணிகலன் அணிந்த வாசவதத்தை வருடி
வாசிப்பக் கேட்ட, மொய்த்த அப்பேரவைக் கண்ணுள் ளோர் தம் உடல்
குளிருமாறு போல வுணர்ந்து வியவாநிற்கும்படி நான்கு வகைப்பட்ட பெரும்
பண்களையும், ஏழு வகைப்பட்ட பாலைப்பண்களையும், இருபத்தொரு
வகைப்பட்ட திறங்களையும், முழுமைபெற வாசித்துக் காட்டா நிற்றலாலே
இன்பமிகுந்த சிறப்போடு கூடிய அந்நல்ல அவைக்களத்தோர் பெரிதும்
பாராட்டிப் புகழாநிற்கும்படி தனது யாழ் வித்தையின் சிறப்பினை
அவ்வரங்கிலே வெளிப்படுத்திக் காட்டிய பின்னர் என்க.
| | (விளக்கம்) மொய்யவை :
வினைத்தொகை. நாற்பெரும்பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி
என்பன. எழுவகைப் பாலை - செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை,
அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை
என்பன. திறம் - நால்வகைப் பெரும் பண்ணினின்றும் பிறக்கும்
கிளைப்பண்கள். இயம் - ஈண்டு யாழ்.
|
|