உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            திருந்திழை மாதர்கொ றெய்வங் கொல்லென
           இருந்தவர் தெருளா ரிசைபுகழ்ந் தேத்தி
           நூலுஞ் செவியு நுண்ணிதி னுனித்தே
           யாழும் பாடலு மற்ற மின்றி
     135    விலக்கும் விடையும் விதியி னறிந்து
           துளக்கில் கேள்வித் தூய்மையின் முற்றி
           வத்தவ நாடன் வாய்மையிற் றருக்கும்
           கொற்ற வீணையுங் கொடுங்குழை கொண்டனள்
           இறைகெழு குமரரு மேனை விச்சைத்
     140    துறைநெறி போகிய துணிவின ராயினர்
 
        (அவையோர் புகழ்தல்)
         131 - 140: திருந்திழை............ஆயினர்
 
(பொழிப்புரை) அவ்வின்னிசை கேட்ட அவையினர் இவள் மானிட மகளோ? தெய்வ மகளோ? எனத் தெளியாதவராய் அவளுடைய இசை நலத்தைப் புகழ்ந்து பாராட்டி நிற்பத் தத்தம் இசை நூலறிவானும் எஃகுச் செவியானும் அவ்விசைச் சிறப்பினை நுணுகி நுகர்ந்து யாழிசையும் மிடற்றுப் பாடலும் விலக்கும் விடையும் ஆகியவற்றைக் கலக்கமில்லாதபடி நூல் விதியாலே அறிந்து பிரச்சோதன மன்னனை நோக்கிப் ''பெருமானே ! நின் அரும்பெறற் செல்வியாகிய வாசவதத்தை தானும் வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணன் கற்பித்தலாலே குற்றமற்ற யாழினது வித்தையின்கண் தூய்மையுடையளாய் முதிர்ந்து இறுமாப்புறுதற்குக் காரணமான வெற்றியையுடைய யாழினைத் தனதாக்கிக் கொண்டனள் ; மற்றும் நின்னுடைய அரசுரிமைக்குரிய மைந்தர் தாமும் அவர்க்குரிய படைக்கல முதலியவற்றின் வித்தைத் துறைவழியே சென்று அவற்றை நன்கு தெளிந்த தெளிவினை உடையராயினர் என்க.
 
(விளக்கம்) திருந்திழை : அன்மொழித்தொகை. இருந்தவர் - அவைக்கண் இருந்த சான்றோர். நூல் - இசைநூல். செவி - இசை நல முணரும் இயல்புடைய எஃகுச்செவி. விலக்கு - ஒருவகைப் பாட்டு. விடை - விடுத்தல். துளக்கில் - கலக்கமில்லாதபடி. தூய்மை - இலக்கணத் தூய்மை. வாய்மையில் - கற்பித்தலால். கொடுங்குழை : வாசவதத்தை; அன்மொழி. இறை - அரசுரிமை. ஏனைவிச்சை - யாழல்லாத வேறு கல்வி.