உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            தேயாத் திருவ நீயுந் தேரின்
           நிலங்கொடை முனியாய் கலங்கொடை கடவாய்
           வேள்வியிற் றிரியாய் கேள்வியிற் பிரியாய்
           இனையோய் தாணிழற் றங்கிய நாடே
     145    வயிர வெல்படை வானவ ரிறைவன்
           ஆயிரங் குஞ்சரத் தண்ணல் காக்கும்
           மீமிசை யுலகினுந் தீதிகந் தன்றெனத்
           தொல்லிசை யாளர் சொல்லெடுத் தேத்தப்
 
                 (இதுவுமது)
              141 - 148: தேயா..........ஏத்த
 
(பொழிப்புரை) அழியாத செல்வத்தையுடையோய் ! இனி ஆராயுமிடத்தே நீதானும் நிலத்தை இரவலர்க்கு வழங்குதலை எப்பொழுதும் வெறுப்பாயல்லை : அணிகலங்களை வழங்குதலையும் தவிர்வாயல்லை ; வேள்வியியற்றுவதினும் பிறழ்வாயல்லை ; நூற் கேள்வியினின்றும் பிரிவாயல்லை ; இத்தகைய மாண்புடைய நினது திருவடி நீழலிலே இனிதின் வதிகின்ற இத்திருநாடு வெல்லும் வச்சிரப் படையினையுடைய தேவர் கோமானாகிய ஆயிரம் யானைகளையுடைய பரதேசுவர சக்கரவர்த்தி பாதுகாக்கின்ற வானுலகத்தினுங் காட்டில், தீங்ககன்ற பெருஞ் சிறப்பையுடையதாயிற்று' என்று பழைய இசைவாணர் சொல்லாற் கூறிப் பாராட்டாநிற்ப என்க.
 
(விளக்கம்) தேயாத்திருவ - அழியாத செல்வமுடையோய் ; விளி. தேரின் - ஆராயுங்கால். நிலங்கொடை - நிலங்கொடுத்தல். கலங் கொடை - அணிகலன் கொடுத்தல். கடவாய் - தவிர்வாயல்லை. இனையோய் - இத்தகையோய். அண்ணல் - பரதேசுவரச் சக்கரவரத்தி. மீமிசையுலகம் - வானவருலகம். தீதிகந்தன்று - தீங்கற்றது.