உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            கலைத்தொழி லவையங் கைதொழப் புக்காங்
           கிருந்த விறைவன் றிருந்தடி குறிகிச்
     160    செம்பொ னல்யாழ் சிலதிகைந் நீக்கி
           அணங்குறை மெல்விரல் வணங்கினள் கூப்பி
 
             (வாசவதத்தை தந்தையை வணங்கல்)
                 158 - 161: கலை ..........கூப்பி
 
(பொழிப்புரை) அது கேட்ட வாசவதத்தை அவ்விருக்கையினின்று எழுந்து தன்னைச் சூழ்ந்திருந்த கலைத் தொழிலிலே மிகுந்த அவையோர் எல்லாம் கைகூப்பித் தொழாநிற்கத் தந்தையிருந்த சூழலிலே புகுந்து ஆங்கிருந்த அம்மன்னவனுடைய திருந்திய திருவடியை அணுகித் தன் கையிலிருந்த செம்பொன்னாலியன்ற நல்ல யாழைத் தன் பாங்கர் வந்த காஞ்சனமாலை கையிற் கொடுத்து யாழ்த்தெய்வம் வதிகின்ற தன் மெல்லிய விரல்களைக் கூப்பி வணங்காநின்றனள் என்க.
 
(விளக்கம்) அவையம் : ஆகுபெயர். இறைவன் - பிரச்சோதனன். சிலதி - காஞ்சனமாலை. அணங்கு : யாழ்த்தெய்வம் - அழகுமாம்.