உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            இன்சொன் மகளி ரெனைப்பல ருள்ளும்
           நுந்தை நெஞ்ச நீயறப் பெற்றாங்
     175    குரக்களி றடக்கிய வோசைத் தாகி
           வரத்தொடு வந்த வசைதீர் சிறப்பின்
           வத்தவ குலத்துத் துப்பெனத் தோன்றிய
           தகையொலி வீணையொ டவைதுறை போகி
           உருவிற் கொத்த திருவினை யாகிக்
     180    குடிவிளக் குறூஉங் கொடியே வாவென
           மாத ராயத்து மகள்வயிற் கொளீஇத்
           தாய ரெல்லாந் தழீஇயினர் முயங்கிச்
           சுற்ற மாந்தர் தொக்கனர் புகல
 
             (ஏனைத்தாயர் மகிழ்ந்து கூறல்)
              173 - 183: இன்சொல்...........புகல
 
(பொழிப்புரை) வாசவதத்தையின் வரவு கண்டு மகிழ்ந்த ஏனைத்தாயர் எல்லாம், 'வருக ! வருக ! நம்மிறைவன் ஈன்ற பெண் மக்களுள் வைத்து நீ ஒருத்தியே அம்மன்னவன் திருவுள்ளத்தை எஞ்சாமற் கவர்ந்துகொண்டு, மேலும் வலியுடைய நளகிரியை அடக்கிய தெய்விகவொலியையுடையதாய், வரமாகக் கிடைக்கப்பெற்றதும், குற்றமற்ற சிறப்பினையுடைய வத்தவ மன்னர் மரபிற்கே ஒரு பற்றுக் கோடாகத் தோன்றிய உதயணனுடையதும் இனிய ஒலியையுடையதுமாகிய கோடவதி என்னும் யாழினை அவன்பாலே முழுதுறப் பயின்று அரங்கேறுதலும் செய்து நீ இயற்கையிற் பெற்றுள்ள நினது பேரழகிற்கேற்ற பெருஞ் செல்வமும் உடையையாய் நங்கள் குடியினை உலகம் உள்ள துணையும் விளக்கம் செய்கின்ற பூங்கொடியே ! வருக!' என்று ஆர்வத்துடன் கூறி அழகிய தோழியர் குழாத்திடையே நின்ற வாசவதத்தையைத் தத்தம் பாலழைத்துத் தனித்தனியே தழுவிக் கொள்ளாநிற்ப, ஏனைச் சுற்றத்தாராகிய மகளிர்களும் கூடி விரும்பி வாசவதத்தையை வரவேலா நிற்ப என்க.
 
(விளக்கம்) மகளிர் - புதல்வியர் என்னும் பொருட்டாய் நின்றது. ஆங்கு : அசை. களிறு - நளகிரி. துப்பு - பற்றுக்கொடு; வலியுமாம். தகை - உதயணன்: ஆகுபெயர். உரு - அழகு. மகளைத் தம்வயின் கொளீஇ என்க. கொளீஇ - கொண்டு. முயங்கி - முயங்க. புகல - விரும்ப.