உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            வத்தவ ரிறைவனை வருகெனக் கூஉய்ப்
     185    பொற்கோட் டம்பலம் பொலிய வேறிக்
           கற்றறி வாளர் சுற்றிய நடுவட்
           டாமுயல் வேட்கையின் மாநிலத் துறையுநர்
           மரமுதல் சாய மருந்துகொண் டாஅங்கு
           நங்குடி வலித்தல் வேண்டி நம்பி
     190    தன்குடி கெடுத்த தகவி லாளனேன்
           என்மனம் புகல வேண்டி னிவனைத்தன்
           மண்மிசை நிறுக்கு மந்திர மிருக்கென
           மதிவ லாளர் விதிவகை யிதுவெனத்
 
            (பிரச்சோதனன் செயல்)
          184 - 193: வத்தவர்..........இதுவென
 
(பொழிப்புரை) இனி, மாட்சிமையுடைய மொழி பேசுமியல்புடைய மன்னனாகிய பிரச்சோதனன் (224) பின்னர் வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணகுமரனை 'வருக வருக' என்று அழைத்துக் கொடுபோய் பொற்குவ டமைந்த அம்பலம் பொலிவுறும்படி புகுந்து, கற்றறிந்த சான்றோர் சூழ்ந்த நடுவண் அமர்ந்து அமைச்சரை நோக்கி 'உலகத்தே பிணிவாய்ப்பட்டோர் தாம் அப் பிணியிற் றப்பும் பொருட்டு எழுந்த அவாவினாலே அந்நோய்க்கு மருந்தாகிய நன் மரத்தை வேருடன் சாயும்படி செய்து மருந்து கொண்டாற்போன்று யான் நங்கள் குடி வலிமை பெறுதலை விரும்பி இந்நம்பி குடியைக் கெடுத்தமையாலே பெருந்தகைமை இல்லாதேன் ஆகினேன்' என்று பரிவுரை கூறிப்பின்னரும் 'என் மனம் இவனை வாய்மையாகவே விரும்பும்படி செய்தலை வேண்டின் நீயிர் இவனை இவனுடைய நாட்டின்கண் நிலைநிறுத்துதற்குரிய சூழ்வினையை மேற்கொள்க ! இங்ஙனம் எண்ணித் துணிவதே அறிவுடையோர் விதித்த முறையாகும்' என்றும் என்க.
 
(விளக்கம்) கூஉய் - அழைத்து. கற்றறிவாளர் - அமைச்சர் முதலியோர். தாமுயல்...தகவிலாளனேன் என்றது உதயணன் கேட்ப அமைச்சரை நோக்கிக் கூறியபடியாம். மரம் முதலுடன் சாய, மரமாகிய முதலுமாம். அமைச்சரையுளப்படுத்தி நங்குடி என்றான். புகல - வாய்மையாக விரும்ப. மந்திரம் - சூழ்ச்சி.