உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
             வளங்கெழு தாயத்து வழியடை யாகிய
            இளங்கோ நம்பியு மிவனொடு செல்கென
            மாண்மொழிக் குருசி லாணைவைத் தகம்புக
     225    நாள்கொண் டெழுவது நாளை யாமென
            அமைச்சனுஞ் செவிலியு மமைந்த வகையால்
            நாள்கொளற் கிருந்துழி நன்னகர் கேட்பக்
 
                     (இதுவுமது)
           222 - 227: வளங்கெழு.........இருந்துழி
 
(பொழிப்புரை) ''வளமிக்க தனது அரசுரிமைக்குப் பின்னுரிமை யுடையோனாகிய இளங்கோவாகிய பாலகனும் உதயணனோடு வத்தவ நாட்டிற்குச் செல்வானாக'' என்றும், இவ்வாறு கட்டளையிட்டுப் பின்னர் அரண்மனைக்கட் செல்லா நிற்ப, உதயணனுடைய அமைச்சனாகிய வயந்தகனும் வாசவதத்தையின் செவிலியாகிய சாங்கியத்தாயும் தம்மோடிருந்து இந்நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் அமைதியோடிருப்பவே அமைச்சர் அவரை ஐயுறாதவராய் அரசன் கட்டளைப்படி வத்தவநாட்டிற்கு நம் படை செல்லற்குரிய நன்னாள் நாளையே என்று முடிவு செய்து அங்ஙனமே செல்லற்கு அமைந்திருக்கும் பொழுது என்க
 
(விளக்கம்) தாயம் - முன்னோர் வழிவந்த பொருள். வழியடை - அப் பொருட்குப் பின்னுரிமையுடையோர். இளங்கோ நம்பி - பாலகுமரன். அமைச்சன் - வயந்தகன். அமைச்சர்கள் இவ்வாறு நாளைக்குப் புறப்படுதல் வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அவ்விடத்தே வயந்தகனும் சாங்கியத்தாயும் இருந்தனர் என்றது பின்னிகழ்ச்சிக்கு இவர்களே காரணம் என நம்மனோர்க்குக் குறிப்பாக வுணர்த்தற்கு என்க. மாண்மொழிக்குருசில் 184 முதலாக 224 வரையில் உள்ள செயல்கட்கு வினைமுதல், குருசில் கூஉய் ஏறி இருக்கெனவும் ஆணையாலே எருக்கியும் ஓலை (ஆணையாலே) போக்கியும் விதித்தும் செல்கென ஆணையிட்டும் புக என இயைபு காண்க.