(விளக்கம்) பாகீரதியை
ஏவிய யூகியே வேறு ஒருத்தியைக் கட்டுவிச்சியாக வேடம் புனைந்துகொண்டு
மாந்தர் முன்னிலையில் இங்ஙனம் குறி கூறும்படி செய்தனன்
என்றுணர்தல் வேண்டும். கட்டறிமகடூஉ - கட்டுவிச்சி. கட்டுப்பார்த்தலை
அறிந்தவள் கட்டாவது - சிறுமுறத்தில் வட்டமாகப் பரப்பிய நெல்லிற்
பார்க்கும் ஒருவகைக் குறி. மாண்பில என்றது தீமையையே குறிக்கின்றன
என்றவாறு. அதுகேட்ட அம்முது பெண்டிர் அவ்வமயம் ஆங்குத்
தெய்வங்காட்டி வந்த பாகீரதியை நோக்கி அதற்கு யாங்கள் செய்த
குற்றமுண்டோ? உண்டெனிற் கூறுமின் என்று வேண்ட என்று
விரித்தோதிக் கொள்க.
|