உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
             கருங்காற் கலிங்கமொடு காஅழ் கலக்கிப்
     240    பிட்ட வாயள் பெரும்பா கீரதி
            பொய்ப்பே யேறிப் பொள்ளென நக்கு
            முலையிடைத் துளங்கு முத்துற ழாரமொடு
            தகையெருத் துரிஞ்சுந் தமனியக் குழையள்
            கொடும்பூண் மார்பிற் கூந்தல் பரப்பிப்
     245    பிடிக்கை யன்ன பெருந்தோ ளோச்சி
            இடிக்குரன் முரசின்மு னெழுந்தன ளாடி
 
                     (இதுவுமது)
             239 - 246: கருங்கால்...........ஆடி
 
(பொழிப்புரை) அது கேட்ட பாகீரதி பொய்யாகப் பேயேறியவள் போன்று கரிய தனது கீழாடையும் மேகலையும் நிலைகுலையும் படியாக மடித்த வாயை யுடையவளாய்ப் பொள்ளென நகைத்துத் தன் முலைமேற் கிடந்து புரளாநின்ற முத்து மாலை யொத்த பளிங்குமணி மாலையும் அழகிய தனது பொன் குழையும் தன் பிடரிலே உராஅயவும் வளைந்த அணிகலனுடைய மார்பிடத்தே தனது கூந்தல் சரிந்து வீழ்ந்து பரவவும், யானைத் துதிக்கையை யொத்த தனது பெரிய கைகளை வீசி, இடிபோன்று முழங்கும் முரசத்தின் முழக்கிற்கிணங்க எழுந்து ஆடி என்க.
 
(விளக்கம்) காற்கலிங்கம் - கீழாடை. கால் கருங்கலிங்கம் என மாறுக. காஅழ் - மேகலையணி. பொள்ளென : விரைவுக் குறிப்பு. ஆடுதலானே முலையிடை முத்துறழ் ஆரம் துளங்கிற்று, குழை எருத்திலுரிஞ்சிற்று என்பது கருத்து. ஓச்சி - வீசி. தேவராட்டியர் அணியும் பளிக்குமணி மாலையை முத்துறழ் மாலை என்றார் என்க. கொடும்பூண் - வளைந்த அணிகலன். பேயேறி ஆடும்பொழுது முரசு முழக்குவது மரபு.

    பாகீரதி ஏறி நக்கு ஆரமும் குழையும் எருத்துரிஞ்சப் பரப்பி ஓச்சி ஆடி என்க. ஆரமும் குழையும் எருத்துரிஞ்ச என்பது கருத்தாகக் கொள்க.

    தெய்வம் ஏறியாடுவோரியல்பினை இயற்கை நவிற்சியாக ஈண்டுக் கூறப்பட்டமை யுணர்க. இன்னும் ''தெய்வமுற்றோ னவிநயம் செப்பின், கைவிட்டெறிந்த கலக்கமுடைமையும், மடித்தெயிறு கவ்விய வாய்த்தொழி லுடைமையும், துடித்த புருவமும் துளங்கிய நிலையும், செய்ய முகமும், சேர்ந்த செருக்கும், எய்தும் என்ப இயல்புணர்ந் தோரே'' எனவும், (சிலப் - 12: 7 - 19. உரை - மேற்) பிறர் கூற்றானுமுணர்க.