உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
             விழாக்கோ ளாளரைக் குழாத்திடைத் தரீஇத்
            திருநீ ராட்டணி மருவீ ராயிற்
            பிணக்குறை படுத்துப் பிளிறுபு சீறிய
     250    இன்றுஞ் சென்றியான் குஞ்சரம் புகுவலென்
            றஞ்சி லோதி யணங்குவாய் கூறப்
 
                     (இதுவுமது)
                247 - 251: விழா...........கூற
 
(பொழிப்புரை) அழகிய சிலவாகிய கூந்தலையுடைய அந்தப் பாகீரதி என்பவள், அந்த மகளிர் குழுவினை நோக்கி 'நீயிர் இன்னே விழாச் சொய்யுந் தொழிலுடையோரை அழைத்து அந்த நீராட்டு விழாவினைச் செய்வித்து நீராடுதல் செய்யீராயின் முன் போலவே யான் இன்றும் சென்று நகரெங்கும் குறைப்பிணங்கள் உண்டாக்கிப் பிளிறிச் சீறும்படி நளகிரியென்னும் அக்களிற்றியானை நெஞ்சத்தே புகுவேன் கண்டீர்!' என்று தெய்வத்தின் வாய்மொழியாகக் கூறி அச்சுறுத்தலாலே என்க.
 
(விளக்கம்) விழாக்கோளாளர் - அரசன் ஆணைப்படி நகரில் திருவிழாவெடுக்கும் தொழிலை மேற்கொள்வோர். திருநீராட்டணி செய்வித்து நீயிரும் அந்நீராட்டு மருவீராயின் என்க. சீறிய - சீறும்படி. குஞ்சரம் - நளகிரி. அஞ்சிலோதி: அன்மொழி. அவள் என்னும் சுட்டுப் பொருட்டாய் நின்றது. அணங்குவாய் - தெய்வத்தின் வாய்மொழி கூறி அச்சுறுத்தலானே என்க.