உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
             விளையாட் டீரணி விற்றுங் கொள்ளும்
     265    தொலைவின் மூதூர்த் தொன்றின மறந்துராய்த்
            தோணியு மரமுந் துறைநா வாயும்
            நீரியன் மாடமு நீந்தியற் புணையும்
            சுண்ணமுஞ் சூட்டுஞ் சூவைநறுந் தேறலும்
            செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும்
     270    கண்ணாற் பிடிகையுங் கட்டமை யூர்தியும்
            பண்ணிரும் பிடியும் பண்ணுவனர் மறலிச்
            செவ்வி பெறாஅ வைகல ராகி
 
              (நகர் விழாக் கொள்ளல்)
        264 - 272: விளையாட்டு...............வைகலராகி
 
(பொழிப்புரை) நீர் விளையாட்டிற்கியன்ற ஈரிய அணிகலன்களைத் தம்மை விற்றுங்கொள்ளு மியல்புடைய அழிவில்லாத அந்தப் பழைய உஞ்சை நகரமக்கள், அதுகேட்ட பொழுதே தமது பழைய நினைவுகளையெல்லாம் மறந்து நகரெங்கும் பரவி நீர் விளையாட்டிற்கு வேண்டிய தோணியும் கட்டுமரமும் நீர்த்துறையிற்றங்கும் ஓடமும் நீரிலே இயங்கும் மாடங்களும் நீந்து மியல்பினையுடைய தெப்பமும் சுண்ணமும் மலர்ச்சூட்டும் சுவையுடைய நறிய கள் வகையும், ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும் தேரும் வண்டியும் கண்ணுக்கு நிரம்பிய அழகுடைய பிடிகையும் ஆகிய இன்னோரன்ன கட்டுதல் அமைந்த ஊர்தி வகைகளும், ஒப்பனை செய்த கரிய பிடியானையும் என்னும் இவற்றையெல்லாம் அமைத்துக் கொள்ளுவதிலே ஒருவர்க்கொருவர் முந்துவாராய் இவற்றை வேண்டுமளவு தேடிக் கோடற்குச் செவ்வியில்லாத நாளையுடையராக என்க.
 
(விளக்கம்) தொன்றின - பழைய நினைவுகள். உராய் - பரவி. ''காலெனக் கடிதுராஅய்'' (மதுரைக் - 125) என்புழியும் அஃதப் பொருட்டாதல் உணர்க. பெயர்ந்து போய் எனினுமாம். தோணி - ஒருமரத்தாலியன்ற சிறிய வோடம். மரம் - கட்டுமரம், நாவாய் பெரிய ஓடம். நீரியல் மாடம் - நீரில் மிதக்கும் மாடம் புணை - தெப்பம், சுண்ணம் - குளிக்குங்காற் பூசிக்கொள்ளும் நறுமணப் பொடி. செண்ணம் - ஒப்பனை. வையம் - வண்டி. பிடிகை - ஓர் ஊர்தி. மறலுதல் ஒருவரோடொருவர் மாறுபட்டு முந்துதல் என்க. செவ்வி பெறா வைகலர் என்றது தாம் விரும்புவனவற்றையெல்லாம் ஈட்டிக் கோடற்கு வேண்டிய நாள்கள் கிடைக்கப்பெறாதவர் என்றவாறு. ஆகி ஆக.