உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
             வான்கிளர்ந் தன்ன வளநீ ராட்டணி
            சேணிடை யுறைநருஞ் சென்று காண்புழிப்
     275    புதவகத் துறைந்தோர் போம்பொழு தென்றென
            உதயண குமரனை யோர்த்துறச் சொல்லி
            நூலறி வாளர் நால்வரை விட்டபின்
            உவாக்கடற் பரப்பி னொல்லென மயங்கி
            விழாக்கொண் டன்றால் வியனகர் விரைந்தென்.
 
                   (இதுவுமது)
           273 - 279: வான்............விரைந்தென்
 
(பொழிப்புரை) இனி வானுலகம் கிளர்ந்து விழா வெடுத்தாற் போன்ற வளப்பமிக்க அந்நீராட்டு விழா ஒப்பனையைத் தூரத்தே வாழும் மாந்தரும் சென்று காணாநிற்குங் காலத்தே, விழாக் கோளாளர் அரண்மனையகத்தோராகிய அரசன் முதலியோர் நீராட்டு விழாவிற்குச் செல்லும் பொழுது யாது? என்றும் உதயண குமரன் போகும் பொழுது யாது? என்றும் அறிந்து வருமாறு நூலறிந்த சான்றோர் நால்வரை விடுத்த பின்னர், அகன்ற அந்த உஞ்சை நகரத்தே வாழும் மக்கள் நீர்விழாவை மேற்கொண்டு விரைந்து புறப்படுவாராயினர்.
 
(விளக்கம்) வான், புதவு, நகர் என்பன நிரலே வானுலகத்தார்க்கும் அரண்மனைக்கும் நகரத்து மார்தர்க்கும் ஆகு பெயர்கள். விழாக் கோளாளர் என்னும் எழுவாய் வருவித்தோதுக. போம்பொழுது என்பதனை உதயணனை என்பதனோடும் ஓர்த்துற என்பதனையும் என்றென என்பதனோடும் ஒட்டிக்கொண்டும் பொருள் கூறுக.