உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            இறைவ னாணை யீங்கெவன் செய்யும்
           புதல்வ ராணை புதுநீ ராட்டெனச்
           சிறாஅர் மொய்த்த வறாஅ விருப்பிற்
     25    கம்பலைத் தெருவி னெம்பரு மெடுத்த
           குடையுங் கொடியுங் கூந்தற் பிச்சமும்
           அடல்வே லியானை யடங்குங் காழும்
           களிறெறி கவிரியொடு காண்டக மயங்கிப்
 
                (இதுவுமது)
          22 - 28 :  இறைவன்.........மயங்கி
 
(பொழிப்புரை) அதுகேட்ட அச்சிறுவர்கள் அரசனுடைய கட்டளை இத்திருவிழாப் பொழுதில் யாது செய்ய வல்லது? புதிய இந்நீராட்டு விழா நிகழுந்துணையும் இளஞ்சிறாஅர்களாகிய எங்கள் கட்டளையே செல்லற்பாலது என்று அசதியாடி ஆரவாரித்து அறாத விருப்பத்தோடே மொய்க்கின்ற ஆரவாரமுடைய தெருவின்கண், எவ்விடத்தும் உயர்த்திய குடைகளும் கொடிகளும் பீலிப்பிச்சமும் கொல்லும் வேற்படையும் யானைகளை அடக்கும் கோலும் களிற்றியானைகள் கையெடுத்து வீசுஞ் சாமரைக்குழாமும் காண்டற்குத் தகுதியாக விரவி என்க.
 
(விளக்கம்) இதனோடு,

"ஆணை ஆணை யகலுமி னீரென
வேணுக் கோலின் மிடைந்தவ ரொற்றலின்
ஆணை யின்றெம தேயென் றணிநகர்
காணுங் காதலிற் கண்ணெருக் குற்றவே"

எனவரும் சீவகசிந்தாமணியை (634) ஒப்புக் காண்க.

அறாஅ விருப்பிற் சிறாஅர் மொய்த்த என மாறுக. கம்பலை - ஆரவாரம். எம்பரும் - எவ்விடததும். கூந்தற்பிச்சம் - மயிற்பீலியாற் கட்டப்பட்ட ஒருவகை விருது. காண் - காண்டல் ; அழகுமாம்.