உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            வைய நிரையும் வயப்பிடி யொழுக்கும்
           கைபுனை சிவிகையுங் கச்சணி மாடமும்
           செற்றுபு செறிந்தவை மொக்கு ளாக
     45    மக்கட் பெருங்கடன் மடைதிறந் ததுபோல்
           எத்திசை மருங்கினு மிவர்ந்துமே லோங்கிய
           கட்டளை வாயி லிவர்வனர் கழிந்து
 
                  (இதுவுமது)
         42 - 47 :  வயப்பிடி............ கழிந்து
 
(பொழிப்புரை) வலிய பிடியானை நிரலும், ஒப்பனை செய்யப்பட்ட சிவிகை நிரலும், மாடச்சிவிகை நிரலும், என்னும் ஆங்கு நெருங்கிக் குழுமிய இவ்வூர்திகள் எல்லாம், நீர்க்குமிழியாகவும் மக்கட் குழு அக்குமிழியையுடையதொரு பெரிய கடலாகவும் அந்தக் கடல் மடை திறக்கப்பட்டுப் பாய்வது போன்று நகரினுள்ளே பல திசையினின்றும் வந்து குழுமி நின்று வானத்தே ஓங்கி நிற்கும் கட்டுக்களையுடைய அந்நகரப் பெரு வாயிலின்கட் புகுந்து நகரத்தைக் கடந்து என்க.
 
(விளக்கம்) வரம்பில் பல்சனம் (48) கடன் மடை திறந்தது போல் வாயில் இவர்ந்தனர் கழிந்து என்க.
    கட்டளை - அளவுடைய எனினுமாம். வாயில் நகரப் பெரு வாயில் என்க. கச்சணி மாடம் - மாடச்சிவிகை. நகரின் அகத்தே நாற்றிசையினின்றும் வந்து குழுமி வாயிலிற் புகுந்து நகரத்தைக் கடந்து என்க.