உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
             வரம்பில் பல்சனம் பரந்த பழனத்
            தாற்றிரு கரையி னசோகம் பொழிலினும்
      50    காய்த்தொசி யெருத்தின் கமுகிளந் தோட்டமும்
            மயிலுங் குயிலு மந்தியுங் கிளியும்
            பயில்பூம் பொதும்பினும் பன்மலர்க் காவுதொறும்
            உயரத் தொடுத்த வூசல தாகி
            மரந்தொறு மொய்த்த மாந்தர்த் தாகிப்
      55    புறங்கவின் கொண்ட நிறங்கிளர் செல்வத்
            தூரங் காடி யுய்த்துவைத் ததுபோல்
            நீரங் காடி நெறிப்பட நாட்டிக்
            கூல வாழ்நர் கோன்முறை குத்திய
 
             (வணிகர் நீரங்காடி வைத்தல்)
          48 - 58 :  வரம்பில்...........கூலவாழ்நர்
 
(பொழிப்புரை) எல்லையற்ற மக்கட் கூட்டம் வந்து பரவியிருக்கின்ற பொது நிலத்தினும், யாற்றினது இரு கரைகளிடத்துள்ள அசோகமரப் பொழிலினும், காய்த்து அக்காய் தாங்க மாட்டாமல் வளைகின்ற கழுத்தினையுடைய இளங்கமுகந் தோட்டங்களினும், மயிலும் குயிலும் குரங்கும் கிளியும் யாண்டுந் திரியா நின்ற மரச் செறிவுகளிடத்தும் பல்வேறு மலர்ப் பொழில்களிடத்தும், மரங்களிலே தூங்கவிட்ட ஊசலின் கண்ணதாகவும் மர நிழலிலே கூடியுள்ள மக்கள் கூடத்தின் கண்ணதாகவும் வணிகர்கள் தாம் நகரத்தே புறத்தேயும் பேரழகுகொண்டு அகத்தேயும் நிறமிக்க பல்வேறு பொருள்களையுடைய அங்காடிகளைப் பரப்பி வைத்தது போலவே நீரணி அங்காடிகளை முறைப்படப் பரப்பி என்க.
 
(விளக்கம்) பழனம் - ஊர்ப் பொதுநிலம். எருத்தின் - கழுத்தையுடைய. பொதும்பு - மரச்செறிவு. மாந்தர்த்து - மக்களையுடையதாகவும், அஃதாவது மக்கட் கூட்டத்தினிடையேயும் என்றவாறு.
    கூலவாழ்நர் - பல பண்டங்களையும் விற்கும் வணிகர். கூலவாழ்நர் ஊரின்கண் அங்காடி வைத்தது போலவே நீரங்காடியையும் வைத்தனர் என்க. ஊரங்காடி - ஊரின் கண்ணுள்ள கடை நீரங்காடி. நீராட்டுக்குரிய பொருள் விற்கும் கடை. உய்த்து வைத்தல் - கொடுபோய் வைத்தல். ஊசலதாக, மாந்தர்த்தாக எனத் திரித்துக் கொள்க.