உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            நிறைவளை மகளிர் நீர்பாய் மாடமொடு
           மிடைபுதலை மணந்த மேதகு வனப்பிற்
           கடல்கண் கூடிய காலம் போல
     80    நூல்வினை நுனித்த நுண்வினைப் படாத்துத்
           தானக மாடமொடு தலைமணந் தோங்கிய
           வம்புவிரி கொட்டிலொடு வண்டிரை மயங்கிச்
           செவ்வான் முகிலிற் செறிந்த செல்வத்
           தெவ்வாய் மருங்கினு மிடையறக் குழீஇ
     85    ஊரிறை கொண்ட நீர்நிறை விழவினுள்
 
                 (இதுவுமது)
           77 - 85 :  நிறை...........விழவினுள்
 
(பொழிப்புரை) நிரல்பட அடுக்கிய வளையல்களையுடைய மகளிர் நீரிற் பாய்ந்து விளையாடற்குரிய நீர்மாடங்களினும், நூலினாற் செய்யும் தொழிலிலே முதிர்ந்த நுண்ணிய தொழிற்றிறமமைந்த படாஅங்களாலே ஒன்றனோடு ஒன்று நெருங்கிப் பேரழ குடையனவாய் அமைக்கப்பட்ட அகன்ற இடத்தையுடைய நீர் மாடங்களினும் அவற்றைத் தொடர்ந்து உயர்ந்தனவாகச் செங்கச்சுக்களை விரித்தியற்றப்பட்ட கொட்டில்களும் அவற்றிடையே வளவிய திரையால் வளைக்கப்பட்ட மண்டபங்களும் விரவிச் செக்கர் வானத்திடையே தோன்றும் முகிலினங்கள் போன்று தோன்றும் தோற்றத்தையும் செறிந்த செல்வப்பெருக்கையும் உடைய பிறவாகிய எவ்வெவ்விடங்களினும் எல்லாக்கடலும் பொங்கியெழுந்து ஓரிடத்தே வந்து கூடுமொரு ஊழிக்காலம் போன்று அவ்வுஞ்சை மாந்தர் வந்து கூடி இடைவெளியின்றி நெருங்கித் தங்கியிராநின்ற நீர் நிறைந்த அத்திரு நீர்ப்பொய்கை விழாவின்கண் என்க.
 
(விளக்கம்) நீர் பாய் மாடம் தானக மாடம் என்பன அம்மாடங்களின் வகை என்க. கடல்கண் கூடிய காலம் போல ஊர் இறை கொண்ட விழவு என்க. வம்பு - செங்கச்சு. செவ்வான் முகில் போலத் தோன்றும் தோற்றத்தையும் என வருவித்தோதுக. வம்புக் கொட்டில் - செவ்வானத்திற்கும் வண்திரை முகிலுக்கும் உவமைகள் என்க. எவ்வாய் மருங்கினும் - எவ்வெவ்விடத்தும் என்க.