உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            அரசுகை கொடுப்ப வண்ணாந் தியலிக்
           கடிகை யாரங் கழுத்தின் மின்னப்
           பயிர்கொள் வேழத்துப் பணையெருத் திரீஇக்
     125    கடவுட் கல்லது காறுளக் கில்லது
           தடவுநிலை நிழற்றிய தாம வெண்குடை
           ஏந்திய நீழற் சாந்துகண் புலர்த்திய
           பரந்த கவரிப் படாகைச் சுற்றத்
           துயர்ந்த வுழைக்கலத் தியன்ற வணியின்
     130    முந்நீ ரொலியின் முழங்கு முரசமொ
           டின்னீர் வெள்வளை யலறு மார்ப்பின்
           மைத்துன மன்னரு மந்திரத் துணைவரும்
           அத்துணை சான்ற வந்த ணாளரும்
           சுற்றுபு சூழ முற்றத் தேறிப்
     135    பிடியும் வையமும் வடிவமை பிடிகையும்
           பெருந்தே னொழுக்கிற் பிணங்கிய செலவின்
           வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும்
           மலர்தூ மாட மயங்கிய மறுகின்
           நாட்பெரு வாயி னாறுநீ ராத்திரை
     140    வாட்கெழு நெடுந்தகை வளம்பட வெழலும்
 
         (பிரச்சோதனன் பொய்கைக்குப் போதல்)
             122 - 140: அரசு..........எழலும்
 
(பொழிப்புரை) வெற்றி வாள் ஏந்திய அப்பிரச்சோதன மன்னன் இருமருங்கினும் பிற மன்னர் தனக்குக் கைகொடுத்து வாரா நிற்பச் செம்மாந்து நடந்து தோள்வளையும் கழுத்தின்கண் ஆரமும் மின்னா நிற்பப் பாகர் கூறும் சொல்லை அறிந்தொழுகும் யானையினது பருத்த பிடரின்கண் நிலைநிறுத்தப்பட்டுக் கடவுளர்க்கல்லது பிறர்க்குக் காம்பு வணக்குதல் இல்லாததும், வளைந்த நிலையிலே நின்று நிழல் செய்வதும், மாலையணியப் பட்டதும், ஆகிய வெள்ளைக்குடை ஏந்துதலானே பட்ட நீழலின்கண், சந்தனமிட்டுலர்த்தப்பட்ட பரந்த சாமரை கட்டப்பட்ட பெருங்கொடி தூக்கிய பரிசனத்தோடும் உயரிய உ.ழைக்கல மேந்துதற்குக் கூடிய மகளிர் கூட்டத்தோடும், கடல் முழக்கம் போன்று முழங்காநின்ற முரசத்தோடு இனிய நீர்மையுடைய வெள்ளிய சங்குகளை முதங்காநின்ற ஆரவாரத்தோடும் மைத்துன முறைமையுடைய அரசர்களும் அமைச்சராகிய துணைவரும் அவ்வமைச்சரளவினராகிய அந்தணரும், தன்னைச் சூழ்ந்துவாரா நிற்ப அரண்மனை முன்றிலிலே நின்ற அக்களிற்றி யானையின்மேல் ஏறிப் பிடியானைகளும் வண்டிகளும் அழகிய உருவமைந்த பிடிகைகளும் பெரிய வண்டுகள் நெருங்கிப் பறந்து போதல் போன்று நெருங்கிய செலவையுடையனாய், வண்ண மகளிர் சுண்ணத்தோடு சொரிகின்ற மலரையும் தூவாநின்ற மாடங்கள் பொருந்திய தெருவின் கண்ணே சிறந்த நாளின் மட்டும் நுழைதற்குரிய மங்கல வாயிலின் வழியே அந்த நறுமணமிக்க நீராட்டு விழாவிற்குச் செல்லும் யாத்திரை வளமுண்டாகப் புறப்படா நிற்றலும் என்க.
 
(விளக்கம்) அரசு - கேண்மையுடைய வேற்று நாட்டரசர்கள். இயலி - நடந்து. கடிகையும் கழுத்தின் ஆரமும் மின்ன என்க. கடிகை - தோள் வளை. கடிகையாரம் என்பது ஓர் அணிகலன் என்பாருமுளர். பயிர் - பயிர்தல். கால் - காம்பு தடவு நிலை - வளைந்து நிற்கு நிலை. கண்புலர்திய: ஒரு சொல். புலர்த்திய என்க. சாந்து புலர்த்திய படாகை, பரந்த கவரிப் படாகை எனத் தனித்தனி கூட்டுக. படாகையை உயர்த்திய சுற்றத்து என்க. சுற்றம் - பரிசனம். உ.ழைக்கலம் - பக்கத்தே வைத்துக் கொள்ளவேண்டிய கலங்கள். அணி - மகளிர் நிரல். இன்னீர் - இனிய நீர்மை. மைத்துன மன்னர் - மைத்துன முறைமையுடைய அரசர். மந்திரத் துணைவர் - அமைச்சர். அத்துணை சான்ற - அவ்வளவமைந்த சுற்றுபு - சுற்றி. முற்றம் - அரண்மனை முற்றம். பிணங்கிய - நெருங்கிய. தேன் - வண்டு. மலர் தூவுதற்கென்றே அமைத்த மாடம் என்க. நெடுந்தகை: பிரச்சோதனன்.