உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            உயவக் கொண்ட வோவியத் தண்டிகை
           வானகொடிப் பவழமொடு வல்லோர் வகுத்த
           ஆன்கட் சந்தனத் தரிக்கவறு பரப்பி
     145    முத்து மணியுஞ் சித்திரத் தியற்றிப்
           பத்தி பயின்ற கட்டகக் கம்மத்து
           மருப்பிடைப் பயின்ற மாசறு மணித்தொழிற்
           பரப்பமை பலகையொடு பாசுணங் கோலி
           ஐவகை வண்ணமு மாகரித் தூட்டிக்
     150    கைவினை நுனித்த கச்சணி கஞ்சிகை
           பசும்பொன் குயின்ற பத்திப் போர்வை
           அசும்பிற் றேயா வலர்கதி ராழி
           பாடின் படுமணி யூடுறுத் திரங்க
           மாலை யணிந்த மணித்தொழிற் பாண்டியம்
     155    நூல்பிணித் தின்னுக நோன்சுவற் கொளீஇக்
           கோல்கொள் கன்னியர் மேல்கொண் டேறி
           விசிபிணி யறுத்த வெண்கோட் டூர்தி
           முரசெறி முற்றத்து முந்துவந் தேறும்
           அரச மங்கைய ரடிமிசைக் கொண்ட
     160    கிண்கிணி மயங்கிய தண்பெருங் கோயிற்
 
           (அரசன் மனைவியர் புறப்படல்)
            141 - 160 :  உயவ..........கோயில்
 
(பொழிப்புரை) காவுவோர் வருந்தும்படி இயற்றிக்கொண்ட ஒவியம் வரைந்த சிவிகைகளிலேயே, இயைபுடைய வெள்ளியையும் இரும்பையும் இயைத்துச் சிறந்த கொடிப்பவழத்தானும் தொழில் வல்லோர் அமைத்த ஆவின் கண்ணையொத்த நிறமுடைய சந்தன மரத்தால் இயன்ற அழகிய ை கம்மரங்களைப் பரப்பி முத்தும் மணியும் ஓவியங்களிலே பதித்து, வரிசை வரிசையாகக் கூறுபடுத்துச் சிற்றறைகளாக அமைக்கப்பட்ட தொழிலையுடைய யானைமருப்பின்கண் பதித்த குற்றமற்ற மணிகளால் ஆய தொழிலையுடைய பரப்பமைந்த பலகையினால் நான்கு பக்கங்களையும் வளைத்து, ஐந்து வகைப்பட்ட வண்ணங்களையும் கூட்டித் தீற்றிக் கைத்தொழிலானே சிறந்த கச்சணிந்த உருவு திரையினையும், பசிய பொன்னாலியன்ற பத்திக் கீற்றையுடைய போர்வையினையும், விளிம்பில் தேய்தலில்லாத ஒளி உருளைகளையும், அமைத்து ஓசையினியனவாகிய ஒலி மணிகளையும் அகத்தே கட்டி, ஒலிக்கும் பொருட்டு மணி பதித்த தொழிலையுடைய சதங்கை மாலையணிந்த எருதுகளையும், நூலானே பிணித்து, இனிய நுகத்தடியை அவற்றின் வலிய பிடரிலே பூட்டித் தாற்றுக்கோலைக் கையிற்கொண்ட கன்னி மகளிர் ஏறியிருந்து செலுத்துகின்ற இறுகக் கட்டப்பட்ட வெள்ளிய யானைத் தந்தத்தாலேயே பெரிதும் இயன்ற வண்டிகளிலே கோப்பெருந்தேவி முதலிய அரசு மகளிர் முரசமுழங்கா நின்ற முற்றத்தே ஒருவர்க்கொருவர் முந்தி வந்து ஏறுதலானே அவர் அடிகளிலே அணிந்த கிண்கிணி யோசை விரவாநின்ற குளிர்ந்த பெரிய அரண்மனையினின்றும் என்க.
 
(விளக்கம்) காவிச்செல்லுதற்குரிய ஓவியச்சிவிகைகளையே உருளை முதலிய உறுப்புகள் அமைத்து எருதுபூட்டிய வண்டிகளாக்கப்பட்ட மகளிர் ஊருகின்ற ஒருவகை ஊர்தி என்க. உயவ - சுமந்து வருந்தும்படி. தண்டிகை - சிவிகை. யாப்புறுத்து - இயைத்து. சந்தன மரத்தாலாய கவறு என்க. கவறு - கைமரம். கம்மம் - தொழில் நுணுக்கம். பாசுணம் - பக்கம். ஆகரித்து - கூட்டி. அசும்பு - விளிம்பு. ஆழி - உருளை. மணித்தொழில் மாலையணிந்த பாண்டியம் என மாறுக. கிண்கிணியோசையென்க.