உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            பண்டிவ் வாழ்வினைத் தண்டியுங் கொள்வோள்
           இன்றிந் நங்கை கண்டதை யுண்டுகொல்
           பாணி செய்தனள் காண்மின் சென்றென
     185    ஏறிய வையத் தெடுத்த கஞ்சிகைத்
           தேறுவா மதியிற் றிருமுகஞ் சுடரக்
           கதிர்விரற் கவியலுட் கண்ணிணை பிறழ
           நெருக்குறு சுற்றத்து விருப்பி னோக்கி
           ஒட்டிழை மகளிரை விட்டனர் நிற்பச்
 
                 (தேவியர் செயல்)
            182 - 189 :  பண்டு............நிற்ப
 
(பொழிப்புரை) அரசன்தேவிமார். நீர்விழாவிற்கு வாசவதத்தை புறப்படாமையாலே, "முன்பெல்லாம் இத்தகைய விழாவிற்குச் செல்கின்ற இன்ப வாழ்க்கையை நம்மை வருத்தியும் மேற்கொள்ளும் இயல்புடைய நம் வாசவதத்தை இற்றைநாள் இன்னும் புறப்படாமைக்குக் காரணம் யாதோ ? ஒரோவழி இன்று அவள் ஏதேனும் புதுமை கண்டிருப்பளோ? காலந்தாழ்த்தனள். நீயிர் சென்று அவளைக் கண்டு அழைத்து வாருங்கோள்!" என்று ஏவன் மகளிரைப் போக்கியவராய், தாம் தாம் ஏறிய வண்டியின்கண் உருவு திரையை அகற்றித் தமது அழகிய முகம் தெளிந்த முழுத்திங்கள் போன்று ஒளி வீசாநிற்ப ஒளியுடைய தம் விரற் கவியலுள்ளே தங்கண்கள் பிறழும்படி ஆங்கு நெருங்குதலையுடைய தமது சுற்றத்தாரூடே அவள் வருகையை ஆர்வத்தோடு நோக்கி நிற்ப என்க.
 
(விளக்கம்) இவ்வாழ்வு - இத்தகைய வாழ்வு. என்றது இங்ஙனம் விழாக்காணும் இன்பவாழ்க்கையை என்றவாறு. தண்டியும் - வருந்தியும் - நம்மை வருத்தியும் என்க. பாணி செய்தனள் - காலந்தாழ்த்தினள். ஒட்டிழை மகளிரைக் காண்மின் சென்றென விட்டனர் என இயைக்க. தேறுமதி உவாமதி என இயைக்க. தேறுதல் - தெளிதல்.