உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
         
     190    சுட்டுருக் ககிலின் வட்டித்துக் கலந்த
           வண்ண விலேகை நுண்ணிதின் வாங்கி
           இடைமுலை யெழுச்சித் தாகிப் புடைமுலை
           முத்திடைப் பரந்த சித்திரச் செய்கொடி
           முதலின் முன்னங் காட்டி நுதலின்
     195    சுட்டியிற் றோன்றிய சுருளிற் றாகி
           வித்தகத் தியன்றதன் கைத்தொழில் காட்டி
           இன்னிசை வீணை யன்றியு நின்வயின்
           உதயண நம்பி யோவியத் தொழிலின்
           வகையறி யுபாயமும் வல்லை யாகெனத்
     200    தந்தது முண்டோ பைந்தொடி கூறென
           உற்ற புருவத் தொராஅ ராகி
           முற்றிழை மகளிர் முறுவல் பயிற்றச்
           செழுங்குரன் முரசிற் சேனா பதிமகள்
           ஒருங்குயிர் கலந்த வுவகைத் தோழியை
     205    நறுநீர்க் கோலத்துக் கதிர்நலம் புனைஇயர்
           நீடகத் திருந்த வாசவ தத்தையை
 
               (வாசவதத்தையின் செயல்)
       190 - 206 :  சுட்டுருக்கு ..........வாசவதத்தையை
 
(பொழிப்புரை) அங்ஙனம்ஏவப்பட்ட மகளிர்அப்பொழுது தீயிற் சுட்டு உருக்கிய அகிற்குழம்பிலே குழைத்துக் கலந்த வண்ணத்திலே தோய்த்த எழுதுகோலைக் கொண்டு (வாசவதத்தை) தன் உயிரொடு கலந்த கேண்மையுடையவளும், தன் உவகைக்குக் காரணமானவளும், பேரொலியையுடைய முரசத்தையுடைய சேனாபதியின் மகளும் ஆகிய தோழிக்கு நறிய இந்நீர் விழாவின் பொருட்டு ஒப்பனை செய்யத் தொடங்கி, அவளுடைய இருமுலைகளுக்குமிடையே முளைத்துப் பக்கத்தே அமைந்த இரண்டுமுலைகளிலும் அணிந்துள்ள முத்துமாலையின்கீழே படர்வதாய்த் தனது ஓவியத்திறத்தாலே எழுதப்பட்ட பூங்கொடியே அவள் நெற்றியிலேறிச் சுட்டியின் கீழே சுருள் சுருளாகத் தழைத்திருப்பது என்று காண்போர் குறிப்பாலே உணர்ந்து கொள்ளும்படி நுதலிடத்தும் எழுதித் தனது வித்தகமமைந்த தொழிற்றிறத்தைக் காட்டி; தனது ஏனைத் தோழிமார் "பசிய தொடியினையுடையோய்! நினக்கு உதயண நம்பி இனிய இசையினையுடைய யாழ் வித்தையைக் கற்பித்ததேயன்றி, ''இவ் வோவியத் தொழிலின் வகைகளை அறிகின்ற உபாயங்களையும் கற்று இவற்றினும் வல்லுநை ஆகுக'' என்று கற்பித்ததும் உண்டோ? கூறுக" என்று தமது புருவம் நெற்றியிலேற வியப்புற்று விடாது பார்த்துப் புன்முறுவல் செய்யா நிற்ப, ஒப்பனை செய்யு ந்தொழிலிலே ஈடுபட்டு நெடிது கன்னிமாடத்தினுள்ளேயே இருந்த வாசவதத்தையைக் கண்டு வணங்கி என்க.
 
(விளக்கம்) ஏவப்பட்ட மகளிர், அப்பொழுது தன் தோழியாகிய சேனாபதி மகட்கு ஒப்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு தனது கன்னிமாடத்தே நெடிதிருந்த வாசவதத்தையைக் கண்டு என்க. வட்டித்து - குழைத்து, வண்ணத்திற்றோய்த்த இலேகை என்க. இலேகை - எழுதுகோல். இடைமுலை - முலையிடை. கொடியாகிய முதல் என்க. முன்னம் - குறிப்பு, நுதற்சுட்டி போல எனினுமாம். சுருளிற்றாக என்க. முற்றிழை மகளிர் - ஏனைய தோழிமார். உயிர் கலந்த தோழி உவகைத்தோழி சேனாபதி மகளாகிய தோழி எனத் தனித் தனி கூட்டுக. நீர்க்கோலம் - நீராடற் கோலம்; நீர் விழாவிற்குச் செய்யும் கோலம் எனினுமாம்.