உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            நீசெலற் பாணிநின் றாய ரெல்லாம்
           தாரணி வையந் தலைக்கடை நிறீஇ
           நின்றனர் திருவே சென்றிடு விரைந்தென
     210    விளங்குபொன் னறையுள விழுநிதிப் பேழையுள்
           இளங்கலந் தழீஇ யெண்ணிமெய்ந் நோக்கித்
           தோழியர்க் கெல்லா மூழுழ் நல்கி
           வதுவை வைய மேறினள் போலப்
 
                    (இதுவுமது)
           207 - 213 :  நீசெலல்........போல
 
(பொழிப்புரை) திருமகள்போல்வாய்! நின்தாய்மாரெல்லாம்நீர் விழாவிற்குப் புறப்படுமளவும் நின்வரவினை எதிர்பார்த்துத் தாம் ஏறிய மலர்மாலை அணிந்த வண்டிகளைத் தலைவாயிலின்கண் நிறுத்தி வைத்து நிற்கின்றனர் காண்! விரைந்து சென்றருள்க! என்றுணர்த்துதலாலே வாசவதத்தை தனது விளங்கா நின்ற பொன்னறையின்கண் உள்ளனவாகிய சிறந்த அணிகலப் பேழையினுள்ள நீராட்டிற்கேற்ற சிற்றணிகலங்களை எடுத்துத் தன் தோழிமாரைப் பொதுவானோக்காது வரிசையான் நோக்கி அவரவர் தகுதிக்கேற்ற அணிகலங்களை முறையே முறையே வழங்கிய பின்னர் விரைந்து சென்று தன் திருமண வண்டியில் ஏறுவாள் போன்று மகிழ்ந்து தன்நற்றாய் வண்டியில் ஏறா நிற்ப என்க.
 
(விளக்கம்) செலற்பாணி - செல்லுமளவும், பாணி -காலம். தார்- மாலை. வையம் - வண்டி. நிறீஇ - நிறுததி. இளங்கலம் - சிற்றணிகலம். மெய்ந்நோக்கி - தகுதியானோக்கி. ஊழூழ் - முறை முறையே. வையம் - நற்றாயின் வண்டி.