உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
             ஆடகப் பொற்கவ றணிபெறப் பரப்பிக்
            கூடங் குத்திய கொழுங்காழ்க் கேற்ப
     250    நாசிகைத் தானத்து நகைமுத் தணிந்து
            மாசறு மணிக்கான் மருப்புக் குடமிரீஇ
            அரக்குருக் கூட்டிய வரத்தக் கஞ்சிகைக்
            கரப்பறை விதானமொடு கட்டி லுடையது
            கோதை புனைந்த மேதகு வனப்பின்
     255    மல்லர் பூண்ட மாடச் சிவிகை
 
              (மாடச் சிவிகையின் சிறப்பு)
             248 - 255 :  ஆடக...........சிவிகை
 
(பொழிப்புரை) ஆடகப்பொன்னாலியன்ற கைம்மரம்அழகுறப் பரப்பிக் கூடம் என்னும் உள்ளறையின்கண் நடப்பட்ட கொழுவிய தூண்களுக்கேற்ப மூக்கணியின்கண் ஒளி முத்துமாலை அணிந்து குற்றமற்ற மணிகள் பதித்த யானைமருப்பாற் செய்த குடத்தை இருத்தி, உருக்கிய சாதிலிங்கம் வழித்த சிவந்த உருவு திரையாலே மறைத்த இடத்தையும், மேற் கட்டியையும், கட்டிலையும் உடையதும் மலர் மாலைகளாலே அணிசெய்யப்பட்ட மேன்மை தக்கிருக்கின்ற அழகினை உடையதும் மறவராலே காவப்பட்டதும் ஆகிய மாடச் சிவிகை என்னும் ஊர்தியின்கண் என்க.
 
(விளக்கம்) ஆடகம் பொன் - பொன்னில் ஒரு வகை. கூடம் உள்ளறை. காழ் - தூண். நாசிகை - மூக்கணை. குடம் - ஓருறுப்பு - கரப்பறை - மறைவான அறை. விதானம் - மேற்கட்டி. மல்லர் - மறவர். மாடச்சிவிகை - சிவிகைவகையினுள் ஒன்று.