உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            தூய்மை யின்றென மாநிலத் தியங்காக்
           கடவு ளியக்கங் கற்குவ போலக்
           குளம்புநில னுறுத்தலுங் குறையென நாணிக்
     325   கதழ்ந்துவிசை பரிக்குங் கால வாகி
           உரத்தகைப் பொற்றா ரரற்று மார்ப்பிற்
           பந்துபுடை பாணியிற் பொங்குமயிர்ப் புரவி
 
                    (குதிரைகள்)
            322 - 327 :  தூய்மை..........புரவி
 
(பொழிப்புரை) நிலம் தாம் மிதித்தற் கேற்ற தூய்மையுடையதன்று எனக் கருதித் தம் கால்கள் நிலத்திலே படும்படி நடவாத தேவர்கள் வானத்தே இயங்கும் இயக்கத்தைத் (குதிரைகள்) தாமும் கற்றுக் கொள்வன போலத் தம் குளம்புகளை நிலத்தில் வைத்தலே தமக்கொரு குற்றம் ஆகும் என்று கருதி நாணி அக்குளம்புகள் நிலத்திலே படுதலைப் பிறர் காணாமைப் பொருட்டு மிகமிக விரைந்து வேகத்தோடு செல்லா நின்ற கால்களையுடையனவாகித் தமது மார்பின் கண்ணவாகிய பொன்னாலியன்ற கிண்கிணிமாலை ஆரவாரிக்கின்ற ஆரவாரத்தோடு பந்தினைப் புடைக்கும் தாள ஒலி போன்ற ஒலிபட விரையா நின்ற பிடரிமயிரையுடைய குதிரைகளும் என்க.
 
(விளக்கம்) தமதுலகம் போன்று பொன்னாலன்றி மண்ணாலியன்றமையின் தேவர் இது தூய்மையின்றென மிதியார் என்றவாறு. கதழ்ந்து - விரைந்து. விசை - வேகம். பரிக்கும் - செல்லும். உரம் - மார்பு. தகை - அழகு. பந்துபுடை பாணி - பந்தடிக்குங்கால் எழும் ஒலி.