உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
         
          இருப தியானையு மெண்பது புரவியும்
          அருமணி மான்றே ரையைந் திரட்டியும்
    10     ஒருநூ றாயிரத் தொருகழஞ் சிறுத்த
          தமனிய மாசையொடு தக்கணை யுதவிக்
          கடவது நிறைந்த தடவளர் செந்தீ
          ஒடியாக் கேள்விப் பெரியோ ரீண்டிய
          படிவக் குழுவினு ளடிமுதல் வணங்கி
    15    ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென
 
        
               (இதுவுமது)
        8 - 15: இருபது.........கொள்கென
 
(பொழிப்புரை) தமக்குக் கடமையாவ தெல்லாவற்றானும் நிரம்பிய வேள்வித் தீயோம்புகின்றவரும், குறையில்லாத வேதக் கேள்வியினை யுடையவரும் விரதவேடமுடையோரும் ஆகிய சான்றோர் குழுமிய கூட்டத்தின்கண் அவருடைய அடிகளை வணங்கி இவ்வந்தணப் பெரியாரும் இவருள் அவாவுடையோரும் பெற்றுக் கொள்கவென்று இருபது யானைகளையும், எண்பது குதிரைகளையும், பெறற்கரிய மணிகள் பதித்த குதிரைபூட்டிய ஐம்பது தேர்களையும், ஒரு நூறாயிரத்தொரு கழஞ் சென்று எடையிட்டுக் கொடுத்த பொன்னாலியன்ற மாசையாகிய காசுகளையும், தக்கணையாக வழங்கியென்க.
 
(விளக்கம்) மான்தேர் குதிரைபூட்டப்பட்ட தேர். மாசை - உழுந்து நிறையுள்ள ஒருவகைப் பொற்காசு. கடவது - தங்கடமையாவது. தட - வேள்விக்குழி. படிவக்குழு - விரதவேடமுடைய கூட்டம். ஆசைமாக்கள் - இவ்வந்தணரல்லாத அவாவுடைய இரவலர்.