உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
           மாசை வாரி மன்னவ னாடி
          அறிநர் தானத் தாயிரம் பொற்பூக்
          கருவிநிலைப் பள்ளிக்குத் தொழுதனன் போக்கிச்
          சுண்ணம் விரவிய சுரியிரும் பித்தைக்
    20    கண்ணி நெற்றி வெண்சூட் டேற்றித்
          தூத்துகி லுடுத்துத் தொடியுடைத் தடக்கைக்
          கோத்தொழி லிளையர் பூப்பலி கொடுத்துச்
          செம்பொ னெல்லின் செங்கதிர் சூட்டி
          வெண்டுகி லிட்ட விசய முரசம்
    25    பண்டிய லமைந்த படுகட னெல்லாம்
          தண்டொழிற் செங்கோ றலைத்தலை சிறக்கென
          வெந்திறல் வேந்தன் விட்டிவை கூற
 
        16 : 27: மாசை............கூற
 
(பொழிப்புரை) இவ்வாறு பிரச்சோதன மன்னன் திருநீர்ப் பொய்கை யின்கண் புகுந்து ஆடற்குமுன்னர் மாசையாகிய பொற்கடலிலே துளைந்து பின்னர் அறிவுடையோர்க்கு வழங்கும் தானப்பொருளோடே ஓராயிரம் பொன்னாலியன்ற பொன்மலர்களை மாணவர் முதலிய தொகுதி களையுடைய கோயிலுக்கு நன்கொடையாக அத்திசை நோக்கித் தொழுது போக்கி நறுமணப்பொடி கலந்த சுருண்ட தலை மயிர்முடியின்கண்ணும் நெற்றியின்கண்ணும் சூட்டும் கண்ணியுமாகிய மலர்களைச் சூட்டிக் கொண்டு, தூய வெள்ளாடையுடுத்துக்கொண்டு அரசாளுந் தொழிலையுடைய மன்னர் மக்கள், தொன்று தொட்டுப் பூவாகிய பலியினைக் கொடுத்துச் சிவந்த பொன் போன்ற நிறமுடைய செந் நெற்கதிரைச் சூட்டி வெள்ளாடை மேலே வைத்து வணங்கப்பட்ட வெற்றிமுரசத்திற்குச் செய்யக் கடவவெல்லாம் பண்டுபோலவே செய்த பின்னர்க் குளிர்ந்த தொழிலையுடைய நம் செங்கோல் நாடோறும் சிறப்புறு வதாக ! என்று வெவ்விய ஆற்றலுடைய அம்மன்னவன் வாய்திறந்து வாழ்த்தா நிற்ப என்க
 
(விளக்கம்) மாசைவாரி - பொற்கடல். கருவி - தொகுதி. பள்ளி - அருகன் கோயில். பித்தை - ஆண்மயிர். கோத்தொழிலிளையர் கொடுத்துச் சூட்டி இட்டமுரசத்திற்குப் பண்டு நிகழ்த்தும் கடனெல்லாம் செய்தென்க. விசயமுரசம் - வெற்றிமுரசு. விட்டு - வாய் விட்டு.