உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
           விசைய வேழத் திசையெருத் தேற்றிப்
    40    பெருவிரல் வேந்தன் சிறுவரை யெல்லாம்
          ஓடுநீர்ப் பெருந்துறை யுள்ளம் பிறந்துழி
          ஆடுக போயென் றவர்களை யருளி
          உதயண குமரனு முவந்துழி யாடித்
          துறைநகர் விழவின் றோற்ற மெல்லாம்
    45    பரந்த செல்வங் காண்கெனப் பணித்துப்
          புரிந்த பூவொடு பொற்சுணங் கழும
          எழுந்த வார்ப்பொ டியம்பல துவைப்பப்
          புண்ணியப் பெருந்துறை மன்னவன் படிந்தபின்
 
        39 - 48: விசைய.........படிந்தபின்
 
(பொழிப்புரை) பேராற்றல்படைத்த அம்மன்னவன் தன் மக்களை வெற்றியுடைய யானைகளிலே ஏற்றுவித்து 'நீயிரெல்லாம் நுங்கள் மனம் விரும்பியபடியே சென்று இயங்காநின்ற நீரையுடைய இப் பொய்கையினது பெரிய துறைகளிலே இறங்கி நீராடுவீராக!'' என்று பணித்தருளிப் பின்னர் இங்ஙனமே உதயணகுமரனும் அவன் மனமுவந்த விடத்தே நீராடி இத்துறையிலே அமைத்துள்ள புது நகர்த்தோற்றங்களையும் ஆங்குப் பரவிக் கிடக்கும் செல்வச்சிறப்பையும் கண்டு மகிழ்க! என்று பணித்துப் பின்னர், விரும்பித் தூவா நின்ற மலர்களும் பொற் சுண்ணமும் தன் மேனி முழுதும் பொருந்தாநிற்பவும், ஆண்டெழுந்த ஆரவாரத்தோடு பற்பல இசைக்கருவிகளும் ஆரவாரிப்பவும் புண்ணியமுடைய அப்பொய்கை யினது பெரிய துறையின்கண் இறங்கி நீராடியபின்னர் என்க.
 
(விளக்கம்) விசையம் - வெற்றி. உள்ளம் பிறந்துழி - மனம் விரும்பிய இடத்தே துறைநகர் நீர்விழாவின் பொருட்டுத் துறைக்கண் புதுவதாக அமைத்த நகரம். நீராடத் தொடங்கும் பொழுது பூவும் பொற் சுண்ணமும் தூவினர் என்பது கருத்து. இயம் - இசைக் கருவி