உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
         
          இறைகொண் டீணடிய வேனை மாந்தரும்
    50    துறைதுறை தோறு முறைவிடம் பெறாஅர்
          தண்புன லாட்டின் றக்கணை யேற்கும்
          அந்த ணாள ரடைக விரைந்தெனப்
          பயினூ லாளரைப் பயிர்வனர் கூஉய்க்
          கவர்வனர் போலக் காதலி னுய்த்து
    55    நன்கல மேற்றி நாளணி யணிந்து
          மங்கல வேள்வியுண் மகளீ வோரும்
 
        49 - 56: இறை...........மகளீவோரும்
 
(பொழிப்புரை) நீராடற்பொருட்டு ஆங்குவந்து தங்கி நீராடற்கென வந்து பொய்கைக்கரைக்கட் கூடிய பிறமக்களும், நீர்த்துறைதோறும் சென்று நிற்றற்கும் இடம் பெறாராய்க் குளிர்ந்த அந்நீராட்டின் பொருட்டுத் தக்கணைப் பொருளை ஏற்றற்குரிய சிறப்புடைய அந்தணாளரைத் துருவிக் கண்டு விரைந்து வருக! வருக! என்று பயிலாநின்ற மெய்ந்நூல்களையுடைய அப்பார்ப்பனர்களைக் கூவி யழைத்து, அவர் வந்துழி அவர் நெஞ்சத்தைக் கவர்ந்து கொள்வார் போன்று அன்புடனே நோக்கி, அழைத்துப் போய் நல்ல அணிகலன் களை அணிந்துமங்கல நாட்குரிய புத்தாடையும் அணிகலனும் அணிந்து மணவேள்வி செய்வித்து மகளிரைத் தானமாக வழங்குவாரும்,
 
(விளக்கம்) தக்கணை - காணிக்கை. மங்கலவேள்வி - மணவேள்வி.