உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           சாந்தரை...........யன கூலப் பெருங்கடை
     25    ஈண்டிய மாதரை யீண்டிடந் தம்மினெம்
           பூங்குழை மாதர் புனலகம் புக்கனள்
           ஆங்கியன் றவளைத் தாங்குந ரில்லெனக்
           கூந்த னறுமண் சாந்தொடு கொண்டு
           நானச் செப்பொடு கூன்பின் றுளங்கப்
     30    பெருங்கோ நங்கை பெட்ப வேறிய
           இருங்கை யிளம்பிடி கடச்செருக் கெய்திக்
           கடிற்றுப் பாகன் கைப்புழிச் செல்லாது
           தொடிக்கை மகளிர் நீர்குடை வெரீஇய
           நெட்டிரும் பொய்கைக் குட்ட மண்டி
     35    ஒளிச்செந் தாமரைப் பாசடைப் பரப்பிற்
           களிக்கய லிரியக் குளிப்பது காண்மின்
 
             (ஒரு பிடியானையின் செயல்)
              24 - 36: சாந்தரை..........காண்மின்
 
(பொழிப்புரை) (சாந்தரை..........யன) இப்பொய்கைக் கரையினது பெரிய வாயிலின்கண் நெருங்கி நிற்கின்ற மாதர்களை நோக்கிப் பெண்டிர்காள் ! யான் செல்லுதற்கு ஈங்கு வழிவிடுங்கோள் ! அழகிய குழையணிந்த எம்பெருமாட்டி நீராடற்பொருட்டு நீரினுள் இறங்கி விட்டனள். அவ்விடத்தே நின்ற அவளைப் பாதுகாப்பவரும் இல்லை என்று கூறிக் கூந்தலுக்கிடும் எருமண்ணும் மயிர்ச்சந்தனமும் கைக்கொண்டு நானப்பொடிபெய்த செப்பையும் உடையராய்க் கூனியராகிய பணிமகளிர் பின்பக்கத்தே உடனடுங்கிச் செல்லாநிற்பக் கோப்பெருந்தேவி விரும்பியேறிய பெரிய கையையுடைய இளமையுடைய பிடியானை மதச்செருக்கடைந்து தன் பாகன் செலுத்தாநின்ற நெறியின்கட் செல்லாமல் அங்குத் தொடியணிந்த கையினையுடைய மகளிர் நீராடுதற்கு அஞ்சும்படி நெடிய பெரிய அப்பொய்கையின்கண் இறங்கி ஆழமான இடத்திற்சென்று ஒளியுடைய செந்தாமரையினது பசிய இலையடர்ந்த பரப்பின்கண் களிப்புடைய கயல்மீன்கள் அஞ்சி அகலும்படி தான் விரும்பியபடி நீரின் மூழ்குதலைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) பெருங்கடை - புகுமிடம். தம்மின் - கொடுங்கள். எம் மாதர் என்றது - எம்பெருமாட்டி என்றவாறு. கடச்செருக்கு - மதவெறி. தாங்குநர் - காப்பவர். கூந்தல் நறுமண் - நீராடுங்கால் கூந்தலில் தேய்த்துக்கொள்ளற்குரிய மணமுள்ள மண்; இதனை எருமண் என்ப. "கூழைக் கெருமண் கொணர்கம்" எனக் குறுந்தொகையினும் (113) வருதல் காண்க. கடிற்றுப் பாகன் - யானைப் பாகன். கைப்புழி - செலுத்துமிடம். நீர்குடை - நீர்விளையாட்டு. வெரீஇய - வெருவும்படி. குட்டம் - ஆழம். பாசடை - பசிய இலை. null