உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
          நீலக் குவளை நிரையித ழுடுத்த
          கோலப் பாசடைப் பால்சொரிந் தன்ன
          தூவெள் ளருஞ்சிறைச் சேவலொ டுளரிப்
     55   பள்ளி யன்னம் பகலிற் றுயிலா
          வெள்வளை மகளிர் முள்குவநர் குடையும்
          நீரொலி மயக்கிய வூர்மலி பெருந்துறைக்
          கடற்றிரைக் கண்டங் கானற் குத்தி
          மடற்பனை யூசலொடு மாட மோங்கிய
     60   உருவ வெண்மணற் பெருவெண் கோயிலுட்
          செம்பொற் கிண்கிணிச் சேனா பதிமகள்
 
             (ஒரு குரங்கின் செயல்)
             52 - 61: நீல..........பதிமகள்
 
(பொழிப்புரை) நீலநிறமுடைய குவளை மலரினது நிரல்பட்ட இதழ்களையுடைய மலர்களையுடைமையானே அழகு பெற்ற பசிய இலைப் பரப்பின் மேலே பாலைப் பெய்துவைத்தாற் போன்ற தமது தூய வெண்மையான பெறற்கரிய சிறகுகளைத் தமது சேவலாகிய அன்னங்களோடு அலகுகளான் வகிர்ந்து பெடையன்னங்கள் தம் பள்ளியாகிய மலர்களிலே பகற்பொழுதின்கண் துயிலாதனவாகும்படி, வெள்ளிய சங்குவளையலை யணிந்த மகளிர் நீரின்கண் முழுகி முழுகி விளையாடா நின்ற நீர் அரவம் பொருந்திய நகரமாந்தர் வந்து பெருகிய பெரிய துறையிடத்தே கடல் அலை போன்று தோன்றாநின்ற கண்டத்திரையைக் கரையின்கண் வளைத்துக்கட்டிக் கரையிலுள்ள மேலும் மடலையுடைய பனையின்கண் கட்டப்பட்ட ஊசலோடு மாடங்களானும் உயர்ந்த அழகிய வெண்மணல்மேல் இயற்றப்பட்ட பெரிய வெள்ளை நிறமான பட வீட்டின் அகத்தே சிவந்த பொன்னாலியன்ற கிண்கிணியையுடைய சேனாபதி மகள் வீறறிருந்து என்க
 
(விளக்கம்) பால் சொரிந்தன்ன சிறை தூச்சிறை அருஞ்சிறை எனத் தனித்தனி கூட்டுக. பள்ளி - படுக்கை. துயிலாவாக என்க. ஊர் : ஆகுபெயர். முள்குதல் - முழுகுதல். கடற்றிரைபோன்று தோன்றுங்கண்டம் என்க. கானலைப் பனையோடு ஒட்டுக. கானல் ஈண்டுக் கரை என்க. வெண்கோயில் - வெள்ளைப்படாத்தாலாய இல்லம். வீற்றிருந்தென்று ஒருசொல் வருவித்தோதுக.