உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           கருங்காற் புன்னையொ டிருங்கரும் புடுத்து
           நாணல் கவைஇய கான லொருசிறை
     110    மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த
           அவிழ்பூங் கோதையோ டவிரிழை பொங்க
           எக்கர்த் தாழை நீர்த்துறைத் தாழ்ந்த
           நெடுவீ ழூசன் முடிபிணி யேறித்
           தொடுவேன் முற்றத்துத் தோழியோ டாடாப்
     115    பட்டியல் கண்டத்துப் பலர்மனங் கவற்றவோர்
           எட்டி குமர னினிதி னியக்கும்
           இன்னொலி வீணைப் பண்ணொலி வெரீஇ
           வஞ்சிக் கொம்பர்த் துஞ்சரித் துளரி
           ஒளிமயிர்க் கலாபம் பரப்பி யிவ்வோர்
     120    களிமயில் கணங்கொண் டாடுவன காண்மின்
 
             (மயிலின் செயல்)
       108 - 120: கருங்கால.்..........காண்மின்
 
(பொழிப்புரை) கரிய அடியினையுடைய புன்னை மரங்களோடு கரிய கரும்புகளையும் ஆடைபோன்றுடுத்து நாணலால் சூழப்பட்ட சோலையின்கண் ஒருபக்கத்தே மகிழம் பூமாலையோடு மருதம் பூங்கொத்து விரவித் தொடுத்த மலர்ந்த மலர் மாலையுடனே ஒளிர்கின்ற அணிகலன்கள் எழுந்து அசையாநிற்ப எக்கர் மணற் பரப்பிலேயுள்ள தாழையினின்றும் நீர்த்துறையிற்றோயும்படி தூங்காநின்ற நெடிய வீழ்களை ஊசலாக முடிந்த பிணிப்பின்கண் தனது காதலியோடு ஆடாது தாங்கிய வேலையுடைய காவலரையுடைய முற்றத்தையுடைய பட்டாலியன்ற கண்டத்திரை கட்டிய மண்டபத்தின் கண்ணிருந்து கேட்போர் பலருடைய நெஞ்சத்தையும் கவலும்படி செய்ய எட்டி குமரன் ஒருவன் இனிதாக இயக்கா நின்ற இனிய ஒலியையுடைய வீணையினது பண்ணொலியைக் கேட்டு வஞ்சி மரத்தின் கிளையின்கண் உறங்கி இருந்த ஒரு மயில் விழித்துக் கொண்டு தனது தோகையை அலகாற் கோதி ஒளியுடைய மயிரையுடைய தனது தோகையைப் பரப்பிக்கொண்டு தனது கூட்டத்தை அடையாநிற்ப அது கண்ட அம்மயில்கள் எல்லாம் ஆடுவனவற்றைக் காணுங்கோள்! என்க.
 
(விளக்கம்) எட்டிகுமரன் தோழியோடு ஆடாது இயக்கும் ஒலி என்க. ஆடாது - ஈறுகெட்டது. கவைஇய - சூழ்ந்த. மகிழினது என்க. மகிழ்தற்குக் காரணமான பூவுமாம். வீழ் - விழுது. கண்டம் - கண்டத்திரை. ஒலிகேட்டுத் தத்தம் காதலரை நினைந்து பலரும் கவலும்படி செய்ய என்றவாறு. இசை - காமப்பண்பை மிகுவிப்பதாகலின் இங்ஙனம் கூறினர். துஞ்சரித்து - விழித்து. களிமயில் கணம் கொள்ள என்க. அம்மயில்கள் ஆடுவன என்க. ஒருமை பன்மை மயக்க மெனினுமாம்.