(விளக்கம்) இவ்வொள்ளிழை மாதரை என்றவள் சினத்தால் யான் பண்டு தலைவனோடு கண்ட
"வையப் பரத்தையை" என விளக்கமும் கூறிக்கொள்கின்றாள்
என்க. இம்மாதரை என்றது கள்ளினுட்டோன்று முருவத்தை. வையப்பரத்தை -
தேர்ப்பரத்தை. அவளைத் தலைவனோடு தேரிற்கண்டேன் என்பது தோன்ற
இங்ஙனம் அடை கொடுத்தோதுகின்றனள். அவன் அப்பொழுது
அங்ஙனமொரு பரத்தையின் தொடர்பு தனக்கில்லை என்று பொய் கூறித்
தப்பினன். இனி அத்தகைய பொய்யை நம்பவேண்டா என்பாள்.
இனிப் பொய்யுண்ணும் பேதையம் அல்லம் என்றாள். பொய்யுண்ணல் -
பொய்யை மெய்யாக உட்கொள்ளுதல் என்க. அரையெழுத்தளைஇத் துனிப்புறுகிளவி
என்றது எழுத்தின் முழுஉருவமும் தோன்றாதபடி மொழிந்த மழலையாகிய சினமொழி
என்றவாறு. அம்மொழியையே அவன் அமிழ்தம் எனக் கேட்க
விரும்புகின்றனன் என அவன் காதற்சிறப்பை விதந்தோதினர்.
பனிக்கடல் என்றது பாற்கடலை.
|