உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           கலந்து காதலி னாடலிற் கைசோர்ந்து
     190    மலர்ந்துகடை போழ்ந்து மாழை கழீஇக்
           காமங் கனிந்த கருந்தடங் கண்ணின்
           இமைதீர் வெம்பனி முலைமுக நனைப்ப
           மாரிப் பிடிக்கை நால்புறல் கடுப்ப
           நீர்பொறை யாற்றாது நெகிழ்ந்துவீ ழிசைந்த
     195    காரிருங் கூந்தல் கையி னேந்தி
           அகலி னகலு முயிரின ளாகித்
           தலைநீர்ப் பெருந்துறை நிலைநீர் நின்ற
           வண்டார் கோதையைக் கண்டன னாகி
           நீணீர் நீந்தி நெடும்புணை யொழியத்
     200   தன்வயிற் செல்லு மில்வளக் கொழுநனை
 
              ((இதுவுமது)
          189 - 200: கைசோர்ந்து..........கொழுநனை்
 
(பொழிப்புரை) அவன்பாற் கலந்த காதலாலே அவன் காதலி செயலறவுகொண்டு அகன்று கடைப்பகுதி போழப்பட்டுக் களிப்பு மிக்குக் காமப்பண்பு கனிந்தொழுகும் தன்கரிய பெரிய கண்ணினது இமைகளைத் தீய்க்குமளவிற்கு வெப்பமுடைய கண்ணீர்த்துளிகள் வீழ்ந்து தனது முலைமுகத்தை நனைப்பவும், கார்காலத்தே மழையினனைந்த பிடியானையினது கை தொங்கினாற் போலே நீரின் நனைந்து அந்நீர்ப் பொறைதாங்காமல் நெகிழ்ந்து வீழ்ந்து தொங்குகின்ற காரெனக் கறுத்த தனது கூந்தலைக் கையிலேந்திக்கொண்டு தன் காதலன் தன்னைப்பிரியின் அப்பொழுதே உயிர்பிரிதற் கியன்ற பேரன்புடையளாய் முதலாவதாகிய நீராடும் பெருந்துறைக் கண்ணே அவன் வருகையை எதிர்பார்த்து நிலைக்குமளவு நீரிலே நிற்கின்ற வண்டுமுரலும் மலர் மாலை அணிந்த அக்காதலியின் நிலைமையை நீராடா நி்ன்ற அக்காதலன் சேய்மையிலிருந்தே கண்டவன் அவட்கிரங்கி நெடிய அந்நீரின்கண் நீந்தும் நெடிய அத்தெப்பத்தை விட்டொழித்து அவள்பால் வந்தானாக; அங்ஙனம் வாராநின்ற தன் இல்லற வாழ்க்கைக்கு வளந்தருபவனான அக்காதலனை நோக்கி என்க.
 
(விளக்கம்) மாழை - மதர்ப்பு: களிப்பு, கழீஇ மிகுத்து - உரிச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். காமம் - பண்பு, கனிதல் - முதிர்தல் இமையைத் தீய்த்தொழிக்கும் வெப்பமுடைய நீர் என்க. நிலைநீர் - நிலைதரும் நீர். வண்டார் கோதை - தலைவி. இல்லறத்திற்கு வளந்தரும் கொழுநன் என்க. நோக்கி என ஒருசொற்பெய்க.