உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           நச்சுமன வேந்தர்க்குத் துச்சி லமைத்த
           சிறுவலி யொருவனிற் றன்மனஞ் சுருங்கி
           நறுமெல் லாக நந்துபொறை யெள்கப்
           போக்கிட மின்றி வீக்கமொடு பெருகி
     210    அம்மையு மழுகுங் கொம்மையொடு கழமிக்
           கால்பரந் திருந்த கருங்கண் வெம்முலை
           மேலிருந் தனயான் பொறையாற் றேனென்
           றொசிவது போலுநின் னொசிநுசுப் புணரா
           தினக்கிடை யிப்புனல் குடைகுவை யாயின்
     215    நினக்கிடை மற்றொன் றுடையை யோவெனக்
           காதற் செவிலி கழறுபு விலக்கவும்
 
        (நீராடல் கடியப்பட்ட ஒரு காரிகையின் செயல்)
              206-216: நச்சு..........விலக்கவும்
 
(பொழிப்புரை) கனவிய குழையினையுடையாள் (231) ஒரு தலைவியை அன்புமிக்க அவள் செவிலித்தாய் "நங்காய்! நின் இடையைப் பார்! அது தானும் நஞ்சுபோன்ற கொடிய நெஞ்சமுடைய மன்னன் ஒருவனுக்கு இடையூறுற்றுழி ஒதுக்கிடம் அமைத்துக் கொடுத்த வலிகுன்றிய ஒருவனைப் போன்று மனங்குன்றி நறிய மெல்லிய மார்பின்கண்ணே நாடோறும் வளரா நின்ற சுமையாலே நலியும்படி வீங்கி நாடோறும் பெருகி அமைதியும் பெருமையும் உடையவாய்த் திரண்டு அடிபரந்திருந்த கரிய கண்ணையுடைய வெவ்விய முலைகள் என்மேலே யிருந்தன. யானோ அவற்றைச் சுமக்கவியலாதேன் ஆயினேன் என்று பிறிதொரு புகலிடமும் காணாமல் தளர்வதுபோல்கின்றது; இங்ஙனம் தளர்கின்ற நின் இடையி னியல்பினை உணராமல் நீ நின்தோழியரிடையே இந்நீரின்கண் ஆடுவையாயின் இவ்விடை முறிந்தொழிதல் ஒருதலை; ஒழியின் நினக்கு நீ இவ்வோரிடையையன்றி மற்றோர் இடையையும் உடையையோ? ஆதலின் நீ நீராடாதே கொள்!" என்று இடித்துக் கூறி விலக்கா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) கொடிய வேந்தனுக்கு ஒதுக்கிடமளித்த வலியிலாதான் அம்மன்னன் செய்யும் இடையூறு கண்டு மனஞ்சுருங்கினாற் போன்று என்க. துச்சில் - உற்றுழி ஒதுங்குமிடம். இடைக்கு மனமுளதுபோற் கூறியது மரபு வழுவமைதி. ஆகம் பொறையான் என்க எனினுமாம். நந்துதல் - பெருகுதல். எள்க - நலிய. முலை நாடோறும் வளரும் என்பாள் நந்து பொறை என்றாள். அம்மை - அமைதி. கொம்மை - பெருமை. கழுமி - திரண்டு. கால் - அடிப்பகுதி. கருங்கண் - கண்ணோட்டமில்லாத கண் என்றும், வெம்முலை - கொடிய முலை என்றும் வேறு பொருள் தோன்றவும் நின்றன. புகலிடமின்றி யொசிவதுபோலும் என இயைத்துக் கொள்க. இனக்கு - இனத்திற்கு. கழறுபு - இடித்துக் கூறி.