உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           போதற் கண்ணே புரிந்த வேட்கையின்
           ஐயரி பரந்த வரிமலர் நெடுங்கண்
           மையுண்டு மதர்த்த மணியொழுக் கேய்ப்பக்
     220   கோல வாகத்துக் கொடிபட வெழுதிய
           சாதிங் குலிக மாதி யாகச்
           சுட்டிச் சுண்ணமொடு மட்டித்துக் கலந்த
           குங்குமக் கொழுஞ்சேறு கூடக் குழைத்திட்
           டிந்திர வின்னெகிழ்ந் துருகி யாங்கு
     225    நீடுர வழியி னூடுநிமிர்ந் தொழுகிப்
           பிணர்முரிப் பட்டுடைப் பெருநல வல்குற்
           காசுநிழற் காட்டு மாசின் மாமை
           ஆவி நுண்டுகி லணிநல நனைப்பப்
           பூவினுட் பிறந்த புனையிழை போலத்
     230    தண்ணீர் தோழிய ராடத் தான்றன்
           கண்ணீ ராடுமோர் கனங்குழை காண்மின்
 
             (இதுவுமது)
       217-231: போதற்கண்ணே..........காண்மின்
 
(பொழிப்புரை) அத்தோழியர் குளிர்ந்த நீரிலே ஆடுதல் கண்டு தானும் ஆங்குப் போகப் பெரிதும் விரும்புகின்ற விருப்பங்காரணமாக அழகிய வரிபரவிய எழிலுடைய மலர்போன்ற தனது நெடிய மையுண்டு மதர்த்த கண்களினின்றும் முத்துக்கள் உதிர்வது போன்று நீர்த்துளிகள் வீழ்ந்து அழகிய தன் மார்பிலே கொடியுருவம்பட எழுதிய சாதிலிங்கக் குழம்பு முதலாகச் சுட்டிச் சுண்ணத்தையும் விரவிக் குழைத்துக் கலந்த குங்குமமாகிய கொழுவிய குழம்பும் சேர அதனையும் குழைத்து வானவில் நெகிழ்ந்துருகினாற்போல நெடிய மார்பு வழியாகப் பெருகி வழிந்து சருச்சரையில்லாத பட்டாடையினது பெரிய அழகையும் அல்குவிலி அணிந்த மேகலையையும் ஒளிதோற்றுவிக்கும் குற்றமற்ற தனது மாந்தளிர் மேனி நலத்தினையும் பாலாவிபோன்ற நுண்ணிய மேலாடை நலத்தினையும் ஒருசேர நனைக்கும்படி தாமரை மலரிலே பிறந்த திருமகள் போலும் அவள் தன் தோழியர் தண்ணீராடத் தான் தன் கண்ணீராடலைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) ஐ - அழகு. அரி -அழகு; கோடுமை யுண்டு மதர்த்த கண் என மாறுக. மணி - முத்து. சாதிங்குலிகம் - சாதிலிங்கம். சுட்டிச்சுண்ணம் - நானப்பொடி. இந்திரவில்-வானவில். பிணர் - சருச்சரை. முரி- முரிதல். நிழல் - ஒளி. ஆவி - பாலாவி. பூவினுட் பிறந்த புனையிழை - திருமகள்.