உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           நுரைபுரை வெண்டுகி லரைமிசை வீக்கி
           அவியிடப் படினென் னாருயிர் வைப்பது
           கடிவோ ரில்லை முடிகுவென னின்றெனச்
           செவிமடுத் தெற்றிச் சிவந்த கண்ணினன்
     290    உண்டற் புண்ணிய முடையெனை யொளித்துக்
           கொண்டனை போகிற் கூடுமோ நினக்கெனப்
           பிண்டப் பொங்கவுட் பெருவிய ரிழிதரக்
           கண்டோ ரார்ப்பக் கலாஅங் காமுறூஉம்
           பண்டப் பார்ப்பான் பட்டிமை காண்மின
 
             (இதுவுமது)
       286 - 294: நுரை..........காண்மின்
 
(பொழிப்புரை) நுரை போன்ற தனது மெல்லிய வெள்ளிய மேலாடையை அரையின் மேல் வரிந்து கட்டிக்கொண்டு "ஏடா! இம்மடைச் சோற்றினை உண்ணுதற்கு வேண்டிய புண்ணியம் உடையேன் யானே காண் ! எனக்கு மறைத்து நீ இதனைக் கொண்டு போவாயாயின் நினக்கு அது கைகூடுவதொன்றாமோ? ஆகாது காண் ! இம்மடைச் சோற்றினை எனக்கு வழங்கினால் யானும் என் ஆருயிரினை வைத்திருப்பேன் : இல்லையேல் இன்றே செத்தொழிவேன் காண் ! இஃதுறுதி, என்னைச் சாவாமற் றடுப்போரும் இல்லை கண்டாய் !'' என்று கூறித் தன் செவிகளிலே அறைந்து கொண்டு சிவந்து கண்ணையுடையவனாய்ச் சோற்றுத் திரளையை அடக்கிய தனது பெரிய கவுளினின்றும் பெரிய வியர்வைத துளிகள் சொட்டவும் கண்டோரெல்லாம் ஆரவாரிப்பவும் கலகஞ் செய்தலை விரும்பா நின்ற அப்பண்டப்பார்ப்பானது வஞ்சனையைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) அவி - மடைச் சோறு. இல்லையேல் என ஒரு சொல் பெய்க. முடிகுவன் - சாவேன். உண்டற்குக் காரணமான நல்வினை. கூடுமோ - கைகூடுமோ. பிண்டம் - சோற்றுத்திரளை. கலாஅம் - கலகம், பண்டப்பார்ப்பான் என்றது பண்டங்களைத் தின்னலன்றிப் பிறிதொன்றுமறியாத பார்ப்பான் என்றவாறு.