உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           நிறைக்குறி னிறைத்துப் போக்குறிற் போக்கும்
           பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை
           முன்னம் புக்க தன்னமர் காதலன்
           பாடகச் சீறடிப் பைந்தொடி மாதரை
     315    ஆடுக வாவித னகவயி னென்றலிற்
           செஞ்சூட் டிட்டிகைச் சுதைச்சுவர்ப் படுகால்
           அஞ்சிறை யன்னத்தி னணிபெற வியலி
           மண்ணுமணி யன்ன வொண்ணிறத் தெண்ணீர்த்
           தண்ணிழற் கண்டே யென்னிழ லென்னும்
     320   நுண்மதி நுணுகாப் பெண்மதி பெருக
 
        ஒரு தலைவன் தலைவியின் ஊடல் தீர்த்து நீராடல்
                311 - 320: நிறை.........பெருக
 
(பொழிப்புரை) பாடகமணிந்த சிற்றடிகளையும் பசிய வளையலையும் உடைய ஒருத்தி வேண்டுங்கால் நீரை நிரப்பின் நிரப்பவும், வேண்டாக்காலை, போக்கின் போக்கவும் பொறியமைந்த நீர் நிரம்பி வழியா நின்ற எந்திர வாவியின்கண் நீராடற் பொருட்டு முன்னர்ச் சென்ற தன்னை விரும்பாநின்ற காதலன் ஒருவன் தன்னை நோக்கி இதன்கண் நீராடுவேம் வருக ! என்று அழைத்தலானே சுட்ட செங்கலானாகிய சுதை தீற்றிய சுவர்களையுடைய, படிக்கட்டின் கண்ணே அழகிய சிறையையுடைய அன்னப் பெடைபோன்று அழகுற ஏறிச் சொன்று கழுவிய நீலமணி போன்ற ஒள்ளிய நிறத்தையும் தெளிவையும் உடைய அவ்வெந்திரவாவி நீரினூடே நோக்கி ஆங்குத் தனது குளிர்ந்த எதிருருவத்தைக் கண்டு இந்நிழல் என்னுடைய நிழலே என்னும் ஆராய்ச்சியறிவின் நுணுக்கம் இல்லாத தனது பேதைமை மிகுதலானே என்க.
 
(விளக்கம்) பொறிப்படை - இயந்திரவமைப்பு. இலவந்திகை - இயந்திரவாவி. வேண்டும் பொழுது நீரை நிரப்பியும் ஏனைப் பொழுது போக்கியும் உதவும் இயந்திரம் உடைய செய்குளம். செஞ்சூட்டிட்டிகை - சுட்ட செங்கல.் படுகால் - படிக்கட்டு. மண்ணு மணி - கழுவிய நீலமணி. பெண்மதி - பேதைமை.